திருச்சி கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு-4 பாதிரியார்கள் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு
திருச்சி : கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கை பெற முன்வராத 4 பாதிரியார்கள் வரும் 21 ம் தேதி ஆஜராக வேண்டும் திருச்சி நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதல்வராக பணியாற்றியவர் பாதிரியார் ராஜரத்தினம். இவர் தன்னை கற்பழித்து கருக்கலைப்பு செய்ய தூண்டியதாக கோட்டை காவல் நிலையத்தில் கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரி புகார் செய்தார். அதன் பேரில் பாதிரியார் ராஜரத்தினம் மீது கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரிக்கு மிரட்டல் விடுத்த பாதிரியார்கள் தேவதாஸ், ஜோ சேவியர், சேவியர் வேதம் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1ல் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கருக்கலைப்பு செய்ததாக பெண் டாக்டரும் வழக்கில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் பாதிரியார் ராஜரத்தினம் உள்பட 5 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படுவதாக இருந்தது.
இதற்காக அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து. கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்ட பெண் டாக்டர் மட்டும் , நீதிபதி முன்னிலையில் ஆஜராகி ஜாமீன் பெற்றார். ஆனால் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை நகலை பெற பாதிரியார்கள் 4 பேரும் கோர்ட்டுக்கு வரவில்லை.
இதனையடுத்து, இந்த வழக்கை வரும் 21 ம் தேதிக்கு நீதிபதி இளங்கோ தள்ளி வைத்தார். அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்கள் 4 பேரும் ஆஜராகி குற்றப்பத்திரிக்கையை பெற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications