வெளிமாநில ஆம்னி பஸ்களுக்கு புதிய கட்டுபாடு
நாகர்கோவில்: சென்னையில் இருந்து கடந்த 7ம் தேதி இரவு பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பஸ் ஒன்று வேலூர் மாவட்டம் காவேரிபாக்கம் அருகே விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 22 பயணிகள் உடல் கருகி இறந்தனர். தமிழகம் முழுவதும் இந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தனியார் ஆம்னி பஸ்களின் வேகத்தை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து ஆம்னி பஸ்களுக்கான விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா, என்பதை கண்டறிய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
வெளிமாநிலத்தில் இருந்து சுற்றுலா என்ற பெயரில் தமிழகத்திற்குள் வரும் ஆம்னி பஸ்கள் சில ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பயணிகள் பஸ்ஸாக இயங்கும். இப்படி இயங்கும் பஸ்கள் பிடிபட்டால் சாலை வரி மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இது போன்ற ஆம்னி பஸ்களுக்கு புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து போக்குவரத்து துறை ஆணையர் ஹர்மந்தர் சிங் அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகலுக்கும் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில் வெளி மாநிலத்தில் சுற்றுலாவுக்காக பதிவு செய்ய பஸ்சை தமிழகத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணிகளை ஏற்றி செல்ல கூடாது. அப்படி ஏற்றி செல்வது தெரிய வந்தால் உடனடியாக அந்த பஸ்சை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்த சுற்றரிக்கை அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications