லஞ்சம் வாங்கியதாக வழக்கு: முன் ஜாமீன் கோரும் மதுரை மேயர் தேன்மொழி

மதுரை மதிச்சியத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயராம் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், மதுரை மாநகராட்சி 9வது வார்டில் மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்திற்கு பின்புறம் உள்ள காலி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மதிச்சியத்தை சேர்ந்த திமுக இலக்கிய அணிச் செயலாளரான சுந்தரராஜன், அவரது மனைவி ரங்கம்மாள் ஆகியோர் கட்டிடம் கட்டி வருகிறார்கள்.
இது குறித்து மேயர், கமிஷனர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. மேலும் மாநகராட்சி மேயர், ஆணையாளர் ஆகியோரது தூண்டுதலின் பேரில் அதிகாரிகளும் ஆக்கிரமிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் லஞ்சம் கைமாறியுள்ளது. இதனால் விதிகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்ட டேவிட் இந்த புகார் குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு உத்தரவிட்டார். மேலும் வரும் ஜூலை 15ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மதுரை மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின், காண்டிராக்டர் மாணிக்கம் பிள்ளை, மாநகராட்சி உதவி கமிஷனர்கள் ராஜகாந்தி, ஆசைத்தம்பி, முத்துச்சாமி, நகரமைப்பு அதிகாரி முருகேசன், சர்வேயர் குருசாமி, உதவி என்ஜினீயர்கள் ஆறுமுகம், சுப்பிரமணியன், தி.மு.க. பிரமுகர் சுந்தரராஜன், அவரது மனைவி ரங்கம்மாள் உள்பட 13 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 120(பி) கூட்டு சதி செய்தல், ஊழல் தடுப்பு சட்டம் 13(2), 13(1)டி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இவர்களை கைது செய்யவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதையடுத்து மேயர் தேன்மொழி தனக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதற்கிடையே தேன்மொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படும் இடம் சுந்தரராஜன் மனைவி ரங்கம்மாள் என்பவருக்கு பாத்தியப்பட்டது என்று தாசில்தார் வழங்கியுள்ள ஆவணங்கள் தெரிவிப்பதாக நகரமைப்பு அதிகாரிகள் என்னிடம் தெரிவித்துள்ளனர். மேற்படி பட்டாதாரர் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே தனி நபருக்கு சொந்தமான இடத்தை இடிக்கும் அதிகாரம் மாநகராட்சிக்கு இல்லை. இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்திலும், போலீசாரிடமும் சமர்ப்பிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications