தயாநிதி மாறனை விசாரிக்க சிபிஐக்கு மன்மோகன் சிங் அனுமதி?
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனை விசாரிக்க சிபிஐக்கு பிரதமர் மன்மோகன் சிங் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் தயாநிதி மாறன் விசாரணைக்குட்படுத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணைக்கு முன்பாக தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்றும் தெரிகிறது.
ஏர்செல் நிறுவனத்தின் நிர்வாகம் சிவசங்கரனிடமிருந்து மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்திதற்கு மாறியவுடன் அதற்கு சாதகமாக தயாநிதி மாறன் நடந்து கொண்டதாகவும் இதற்குப் பிரதியுபகாரமாக மேக்ஸிஸ் நிறுவனம், சன் டைரக்ட் நிறுவனத்தில் பல கோடியை முதலீடு செய்ததாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
இதுதவிர பிஎஸ்என்எல் நிறுவன தொலைபேசி இணைப்புகளை தனது அண்ணனுக்குச் சொந்தமான சன் டிவிக்கு முறைகேடாக பயன்படுத்தியதாகவும் தயாநிதி மாறன் மீது புகார் எழுந்துள்ளது.
ஏர்செல் விவகாரம் தொடர்பாக அதன் முன்னாள் தலைவர் சிவசங்கரன் சிபிஐயிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் தயாநிதி மாறன் மீது வழக்குத் தொடர சிபிஐ தயாராக உள்ளது. அதற்கு முன்பாக அவரை விசாரிக்க திட்டமிட்ட சிபிஐ, இதுதொடர்பான அனுமதியைக் கோரி வழக்கு விவரங்களை பிரதமருக்கு அனுப்பி வைத்தது.
இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் முக்கிய ஆலோசனை நடத்தியதாகவும், அதன் பின்னர் சிபிஐ விசாரணைக்கு அனுமதி வழங்க அவர் முடிவு செய்ததாகவும் தெரிகிறது.
மேலும் தயாநிதி மாறனை பதவி விலக கேட்டுக் கொள்வது என்றும் அவர் விலகாவிட்டால் நீக்குவது என்றும் பிரதமர் தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாம். பிரதமரின் முடிவுகளுக்கு காங்கிரஸ் மேலிடமும் பச்சைக் கொடி காட்டி விட்டதாக தெரிகிறது.
தயாநிதி மாறன் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நிற்பதால் வருகிற நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடரை சந்திப்பதில் பெரும் சிக்கலாகி விடும் என்ற அச்சத்தால்தான் பிரதமர் இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications