கனிமொழியை சந்திக்க கருணாநிதி நாளை மீண்டும் டெல்லி பயணம்
ஆரம்பத்தில் கனிமொழி மற்றும் கலைஞர் டிவியின் நிர்வாகி சரத்குமாரின் ஜாமீன் மனுக்களை நீதிபதிகள் சதாசிவம், பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென நீதிபதிகள் இருவரும் விலகிக் கொள்ளவே, நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான பெஞ்சுக்கு வழக்கு மாற்றப்பட்டு இன்று விசாரணைக்கு வந்தது.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி மற்றும் பி.எஸ்.செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுக்களை விசாரித்து அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
2ஜி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவது ஜூலை 2வது வாரத்தில் இருந்து தொடங்கும் என்று தெரிகிறது. அதில் கனிமொழி மீது ஆகஸ்டு முதல் வாரத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம். எனவே கனிமொழி இன்னும் 45 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.
இந் நிலையில் கனிமொழியை சந்திக்க திமுக தலைவர் கருணாநிதி நாளை காலை 8.30 மணியளவில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.