Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைமை செயலகத்தை மாற்ற வேண்டிய அவசியம் ஏன்? - மு.க.ஸ்டாலின் கேள்வி

Subscribe to Oneindia Tamil

கோவை: தலைமை செயலகக் கட்டத்தை மீண்டும் மாற்ற வேண்டிய கட்டாயம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுக பொருளாளர் முக ஸ்டாலின்.

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் கோவை சித்தாபுதூரில் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் துணை முதல்வரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின், "தேர்தலுக்கு பின்னர் சமச்சீர் கல்வியை ரத்து செய்யக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு வந்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு அப்பீல் செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்வியில் வேண்டுமானால் மாற்றம் செய்து அமல்படுத்த வேண்டும். இதற்காக ஒரு குழுவை அமைக்கலாம் என்று தீர்ப்பு கூறியது. அதன்படி ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் பெயருக்கு சில அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

சமச்சீர் கல்வி பாடப் புத்தகத்தில் சில பக்கங்களை ஸ்டிக்கர் வைத்து மறைக்கும் வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது.

அறிவியல் புத்தகத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டம் என்ற திட்டம் வரக் கூடாது என்பதற்காக அதையும் ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து உள்ளனர். அதே அறிவியல் பாட புத்தகத்தில் அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டம் என்ற பெயரையும் அழிக்க முயற்சி நடக்கிறது.

தலைமை செயலகம் கலைஞரின் சொந்த பணத்தில் கட்டப்பட்டது அல்ல. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டது. அதை மாற்ற வேண்டிய அவசியம் ஏன்? தலைமை செயலக பிரச்சினையில் எத்தனை விசாரணை கமிஷன் வேண்டுமானலும் போடுங்கள். நாங்கள் பார்க்காத கமிஷனா? எங்கள் மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை.

தலைமை செயலக கட்டடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டது. இது முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை என்பது உண்மையே. ஆனால், முறையாக கட்டப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டதற்காக புதிய தலைமை செயலகத்தை புறக்கணிக்கும் ஜெயலலிதா, எங்கள் ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்களில் பயணிப்பதை தவிர்ப்பாரா?

வித்தியாசம் வெறும் 2.33 லட்ம் வாக்குகள்தான்!

2011 சட்டமன்ற தேர்தலில் பதிவாகியிருந்த வாக்குகள் எவ்வளவு என்று சொன்னால் 3 கோடியே 67 லட்சத்து 53 ஆயிரத்து 114 வாக்குகள். இதில் தி.மு.க. கூட்டணிக்கு கிடைத்திருக்கிற வாக்குகள் ஒரு கோடியே 45 லட்சத்து 29 ஆயிரத்து 501 வாக்குகள்.

கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் நாம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபோது தி.மு.க. கூட்டணிக்கு கிடைத்த வாக்குகள் ஒரு கோடியே 47 லட்சத்து 62 ஆயிரத்து 647 வாக்குகள். இந்த தேர்தலில் ஆட்சிக்கு வர முடியாத நிலையில் நாம் பெற்றிருக்கிற வாக்குகள் ஒரு கோடியே 45 லட்சத்து 29 ஆயிரத்து 501 வாக்குகள். ஆக வித்தியாசம் எவ்வளவு என்றால் 2 லட்சத்து 33 ஆயிரத்து 146 வாக்குகள்.

இன்னொரு புள்ளி விவரத்தை கூற விரும்புகிறேன். கடந்த 2006 ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. 132 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. அன்றைக்கு நாம் பெற்ற வாக்குகள் 87 லட்சத்து 28 ஆயிரத்து 361.

2011 ம் ஆண்டு நாம் தனித்து போட்டியிட்டது 119 தொகுதிகள் என்றாலும் நம்முடைய உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மற்ற கட்சிகளையும் சேர்த்தால் மொத்தம் 124 தொகுதிகளில் போட்டியிட்டோம். இப்போது நாம் பெற்ற வாக்குகள் 82 லட்சத்து 49 ஆயிரத்து 991 வாக்குகள். ஆக 50 லட்சம் வாக்குகள் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் குறைவாக பெற்றிருக்கிறோம். வேறல்ல.

இந்த கூட்டத்தில் நான் தெரிவிப்பது வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல. நமக்கு வாக்களிக்க தவறியவர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். 30 ஆண்டு காலம், 50 ஆண்டு காலம் ஆட்சி பொறுப்பில் இருந்தால் என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற முடியுமோ அத்தனை திட்டங்களையும் ஐந்தே ஆண்டிலே கலைஞர் தமிழ்நாட்டு மக்களுக்காக நிறைவேற்றியுள்ளார்.

தோல்விக்காக வெட்கப்படவில்லை!

இன்று எதிர்க்கட்சி வரிசையிலே கூட உட்கார்ந்து பணியாற்ற முடியாத நிலை உருவாகி உள்ளது. இதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இதற்காக நாங்கள் வெட்கப்படவில்லை. எதிர்க்கட்சியாக பணியாற்றக்கூடிய வாய்ப்பு தி.மு.க.வுக்கு இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்திலே நின்று பணியாற்றும் கட்சியாக தி.மு.க. விளங்கும் என்று கூறிக்கொள்கிறேன்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாட்டு மக்களுக்காக தொண்டாற்றக் கூடிய கழகமாக தான் அண்ணா இந்த இயக்கத்தை உருவாக்கி தந்தார்கள். வெற்றி, தோல்வியை ஒன்றாக கருதி செயல்படும் கட்சியாகத்தான் தி.மு.க. செயல்பட்டு வந்துள்ளது.

நாங்கள் தலைவரை சந்தித்த போது உங்களுக்கு மக்கள் ஓய்வு கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னோம். ஆனால் இன்று நடக்கிற ஆட்சியை பார்த்தால் தனிப்பட்டவருக்கு பாதிப்பு வந்தால் சும்மா இருந்து விடலாம். ஆனால் ஒட்டு மொத்த தமிழகத்திற்கே பாதிப்பு வந்தால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது என்ற காரணத்தால் கலைஞர் தனது விளக்கங்களை அளித்திருக்கிறார்," என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+