ஜெ கோரிக்கையை உடனே ஏற்பு: கிருஷ்ணா தண்ணீர் திறந்தார் ஆந்திர முதல்வர்!
சென்னை: சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக உடனே தண்ணீர் திறந்துவிடுமாறு முதல்வர் ஜெயலலிதா விடுத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டார் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி.
இந்தத் தண்ணீர் இன்று மாலை சென்னையை அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்துக்கு வருகிறது.
சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை உருவாக்கினார் அமரர் எம்ஜிஆர். அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து உதவினார் ஆந்திராவின் அன்றைய முதல்வர் என்டிஆர்.
இத்திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி நீர் தேக்கத்துடன் இணைக்கும் கால்வாய் தோண்டப்பட்டது.
இது ஆந்திர மாநிலத்தில் 152 கிலோ மீட்டர், நீளமும் தமிழ்நாட்டில் 25 கி.மீ. நீளமும் உள்ளது. இக்கால்வாய் கட்டு மானப்பணிகள் 1996 ல் முடிக்கப்பட்டது. அப்போதிலிருந்து பூண்டி நீர் தேக்கத்திற்கு இத்திட்டத்தின் மூலம் தண்ணீர் பெறப்படுகிறது.
கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின்படி ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி..எம். சி, தண்ணீர் விடவேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம். சி. தண்ணீர் வழங்கப்பட வேண்டும்.
இந்நிலையில் சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடும்படி முதல்வர் ஜெயலலிதா ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதினார்.
இதையடுத்து சென்னைக்கு தண்ணீர் திறந்து விடும்படி கிரண்குமார் ரெட்டி உடனடியாக உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விப்பட்டது.
தற்போது வினாடிக்கு 500 கனஅடி விதம் திறந்து விடப்படுகிறது. நாளை இரவு பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்டலேறு அனையில் தற்போது 30 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே தேவையான அளவு தண்ணீர் பூண்டிக்கு தொடர்ந்து திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications