பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்க தமிழக அரசுக்கு இந்து முன்னணி கோரிக்கை
பொள்ளாச்சி: பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று இந்து முன்னணி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை தெற்கு மாவட்ட இந்து முன்னணி செயற்குழு கூட்டம் பொள்ளாச்சி வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு உடுமலை, மடத்துக்குளம், வால்பாறை, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த பலர் அதிகளவில் குடியேறி வருகின்றனர். அவர்களில் பலரது செயல்பாடுகள் சந்தேகப்படும்படியாக உள்ளது. எனவே, போலீசார் அவர்களை தங்களது கண்காணிப்பில் கொண்டு வரவேண்டும்.
இந்துக்கள் தெய்வமாக வழிபடும் பசுமாடுகளை கேரளாவுக்கு இறைச்சிக்காக கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்.
இது போன்ற பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.