முல்லைப் பெரியாறு: உம்மன் சாண்டி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறி்த்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது.
தமிழக-கேரள எல்லையையொட்டி இடுக்கி மாவட்டத்தில், தேக்கடி அருகே முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இங்கிருந்து, தமிழகத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்பட 7 விவசாயத்திற்கு நீர் கிடைக்கிறது. மேலும், மின் உற்பத்திக்கும் நீர் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் கேரள அரசு அணையின் உறுதி குறைந்துள்ளதாகக் கூறி புதிய அணை கட்டத் திட்டமிட்டது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது கேரள முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் உம்மன் சாண்டி தலைமையில் இன்று மாலை திருவனந்தபுரத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள நிபுணர் குழு தமிழகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறதோ என்று கேரள அரசு சந்தேகிக்கிறது. இது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
நிபுணர்கள் குழு தங்கள் அறிக்கையை சமர்பிக்கும் முன்பே அணையில் உள்ள விரிசல்களை எபோக்சி என்ற ரசாயனம் கொண்டு அடைத்துவிடலாம் என்று தெரிவித்தது. இதனால் தான் கேரள அரசு நிபுணர் குழுவை சந்தேகிக்கிறது. இது தவிர கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அணையை ஆய்வு செய்த மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள், அணை உறுதியாக உள்ளது என அறிக்கை சமர்ப்பித்தனர்.
அந்த குழுவில் இருந்தவர்கள் தான் தற்போது அமைக்கப்பட்டுள்ள குழுவிலும் இருப்பதால் மீண்டும் அணை உறுதியாகத் தான் இருக்கிறது என்று கேரள அரசுக்கு எதிராக அறிக்கை சமர்பித்துவிடுவார்களோ என்ற அச்சம் உள்ளது. அவ்வாறு சமர்பித்தால் என்ன செய்வது என்பது குறித்து இன்று ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications