இந்திய தொலை தொடர்பு நிறுவனங்களின் வருவாய் 12% அதிகரிப்பு
மும்பை: இந்தியத் தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களின் வருவாய் 2010-11ம் நிதியாண்டில் 12 சதவீதம் அதிகரித்து ரூ.1,19,845 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தவிர்த்து அனைத்து தனியார் தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களின் வருவாயும் அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் ஏர்டெல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது. ஆனால், ஏர்செல், டாடா டெலிசர்வீசஸ், ஐடியா செல்லுலார், வோடாபோன் எஸ்ஸார் ஆகியவற்றின் வருவாய் பெருமளவில் அதிகரித்துள்ளது.
வாடிக்கையாளர் எண்ணிக்கை அடிப்படையில் முதலிடத்தில் உள்ள ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் 7.2 சதவீதம் மட்டுமே உயர்ந்து ரூ.37,534 கோடியாக அதிகரித்துள்ளது. சென்ற மே மாதம் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 16.71 கோடியைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் ஏர்செல் நிறுவனத்தின் வருவாய் 36 சதவீதம் அதிகரித்து ரூ.5,620 கோடியாக உயர்ந்துள்ளது. வோடாபோன் நிறுவனத்தின் வருவாய் 15 சதவீதம் வளர்ந்துள்ளது.
டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் வருவாய் 22.2 சதவீதம் அதிகரித்து ரூ.10,006 கோடியாக உயர்ந்துள்ளது.
ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் வருவாய் 19.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
செல்போன் சேவையில் ஒரே எண் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்நிறுவனத்தில் இணையும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 9.38 கோடியாக உயர்ந்துள்ளது.
செல்போன்கள் விற்பனையில் பின்லாந்தை சேர்ந்த நோக்கியா நிறுவனமே முதலிடத்தில் உள்ளது. இதையடுத்த நிலையில் கொரியாவின் எல்.ஜி. மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
2010ம் ஆண்டில் இந்தியாவில் 17 கோடி செல்போன்கள் விற்பனையாகியுள்ளன.












Click it and Unblock the Notifications