சோனியாவை நேரடியாக சந்தித்து ஆதரவு கேட்ட ரங்கசாமி-குழப்பத்தில் புதுவை காங்.
புதுச்சேரி: தங்களிடம் வருவார், ஆதரவு கேட்பார், கெஞ்சுவார் என்று எதிர்பார்த்திருந்த புதுவை காங்கிரஸார், முதல்வர் ரங்கசாமி நேரடியாக டெல்லி போய் சோனியா காந்தியையே பார்த்து விட்டதால் பெரும் குழப்பத்திலும், கலக்கத்திலும் தள்ளப்பட்டுள்ளனர்.
புதுவை அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, வரலாறு காணாத வெற்றியைப் பெற்றவர் ரங்கசாமி. தனிக் கட்சி ஆரம்பித்து மூன்றே மாதத்தில், 40 சதவீத வாக்குகளை அள்ளி அமோக வெற்றி பெற்றார் ரங்கசாமி. அங்கு பல காலமாக ஆட்சியில் இருந்து வந்த காங்கிரஸை புறமுதுகிட்டு ஓட வைத்தவர். ஆனால் இன்று அவரது நிலை படு காமெடியாக மாறியுள்ளது.
கை நிறைய எம்.எல்.ஏக்களை வைத்திருந்தும் அவரால் நிம்மதியாக ஆட்சிநடத்த முடியவில்லை. அமைச்சர்களையே நியமிக்க முடியாமல் கடுமையாக தடுமாறினார் ரங்கசாமி. பின்னர் ஒரு வழியாக நான்கு பேரை அமைச்சராக்கினார். ஆனால் அவர்களுக்கு இதுவரை இலாகாக்களை அவர் ஒதுக்கவில்லை.
இந்த நிலையில் தனது அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களில் கிட்டத்தட்ட அத்தனை பேருமே அமைச்சர் பதவி கேட்டு முரண்டு பிடிப்பதால் பெரும் சிக்கலில் தவித்து வருகிறார் ரங்கசாமி. மேலும், நான்கு எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி வேறு உயர்த்தியுள்ளனர்.
இது இப்படி இருக்க இதுவரை சட்டசபைக்கு சபாநாயகர் தேர்வு செய்யப்படவில்லை. அதிமுகவும் தனது ஆதரவை விலக்கிக் கொண்டு விட்டதால் ரங்கசாமிக்கு பெரும் சிக்கலாகியுள்ளது.
சபாநாயகர் தேர்தலை நடத்தினால், அதிமுகவும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக ஆகியவை இணைந்து கவிழ்த்து விட்டு விடலாம் என்று அஞ்சுகிறார் ரங்கசாமி. இதனால்தான் சபாநாயகர் தேர்வை நடத்தாமல் அவர் காலம் தாழ்த்தி வருகிறார்.
இந்த நிலையில் சிக்கலுக்குத் தீர்வு காண எதிரியின் வீட்டுக்கே நேரடியாக போக முடிவு செய்த அவர் டெல்லிக்கு மின்னல் வேகத்தில் போய் சோனியா காந்தியையே நேரடியாக சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார்.
இதை புதுச்சேரி காங்கிரஸார் எதிர்பார்க்கவில்லை. தங்களைத் தொடர்பு கொள்வார், ஆதரவு கேட்பார் என்று காத்திருந்த அவர்களுக்கு நேரடியாக சோனியாவை போய் ரங்கசாமி பார்த்ததால் பெரும் குழப்பமும், கலக்கமும், கடுப்பும் ஆகியுள்ளது.
இந்த நிலையில் தன்னைச் சந்தித்த ரங்கசாமியிடம், உங்களது பிரச்சினை குறித்து குலாம் நபி ஆசாத்துடன் பேசுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார். அத்தோடு நில்லாமல், எதற்கு இரண்டு கட்சிகளாக நாம் பிரிந்திருக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதுகுறித்து ரங்கசாமி அப்போது பதில் ஏதும் தராமல் மெளனமாக இருந்துள்ளார்.
தொடர்ந்து பேசிய சோனியா, பேசாமல் உங்களது கட்சியை காங்கிரஸுடன் இணைத்து விடுங்கள் என்றும் அறிவுரை கூறியுள்ளார். இதுதான் புதுச்சேரி காங்கிரஸாரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாம். ரங்கசாமி தனது கட்சியைக் கலைத்து விட்டு காங்கிரஸில் இணைந்தால் தாங்கள் எல்லாம் டம்மியாக வேண்டியதுதான் என்பதே அவர்களின் அச்சம். இதனால் ரங்கசாமியின் நடவடிக்கைகளை அவர்கள் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்துள்ளனர்.
தற்போதைய நிலையில் சோனியாவிடம் இன்னும் ரங்கசாமிக்கு நல்ல பெயர் உள்ளது. அவர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் முதல் ஆளாக அவர் வாழ்த்து தெரிவித்தார். தற்போது தனது கட்சியை காங்கிரஸுடன் இணைக்க ரங்கசாமி முன்வந்தால் அதை அவர் மனமுவந்து வரவேற்று, உள்ளூர் காங்கிரஸாரை தட்டி வைத்து ரங்கசாமியுடன் இணக்கமாக செயல்படுமாறு உத்தரவிடலாம் என்று தெரிகிறது. இதனால்தான் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள் கடும் பயத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications