28ல் டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மதிமுக ஆர்பாட்டம்: வைகோ
மதுரை: டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மதிமுக சார்பில் வரும் 28-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரத்தை முற்றிலும் சீர்குலைக்கச் செய்திடும் வகையில் மக்கள் விரோத காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு விலையை ரூ. 50, டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ 3, மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 2 என்ற விகிதத்தில் உயர்த்தி உள்ளது.
இந்த விலை உயர்வு ஏற்கனவே தாங்கமுடியாத விலைவாசி ஏற்றத்தால் விழி பிதுங்கி நிற்கும் அடித்தட்டு, நடுத்தர மக்களின் தலையில் பாராங்கல்லைத் தூக்கிப்போடுவதுபோல் உள்ளது.
இந்த விலையேற்றம் எண்ணெய் நிறுவனங்கள் மக்களை சுரண்டிக் கொள்ளையடிப்பதற்கான அநியாய ஏற்பாடாகும். இதனை கடுமையாக கண்டிப்பதோடு, விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி மதிமுக சார்பில் வரும் 28-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நானும், அவைத் தலைவர் சு.துரைசாமி, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஆகியோரும், பொருளாளர் டாக்டர் இரா. மாசிலாமணி விழுப்புரத்திலும், துணைப் பொதுச் செயலாளர் நாசரேத் துரை நாகர்கோவிலிலும், துணை பொதுச்செயலாளர் துரை. பாலகிருஷ்ணன் தஞ்சாவூரிலும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கின்றோம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications