ராம்லீலா மைதான சம்பவத்திற்குப் பின் முதல் முறையாக டெல்லி வந்த ராம்தேவ்
டெல்லி: ராம்லீலா மைதானத்தில் நடந்த பெரும் களேபரத்தின் இறுதியில் டெல்லியை விட்டு வெளியேற்றப்பட்டு 20 நாட்கள் கழித்து இன்று யோகா குரு பாபா ராம்தேவ் முதல் முறையாக டெல்லி வந்தார்.
ஜூன் 5ம் தேதி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் தனது ஆதரவாளர்களோடு ராம்தேவ் ஊழலுக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். அன்று நள்ளிரவில் அதிரடியாக புகுந்த போலீஸார் அனைவரையும் விரட்டியடித்தனர். ராம்தேவை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றி பின்னர் விமானம் மூலம் ஹரித்வாருக்குக் கொண்டு போய் விட்டு விட்டனர்.
அதன் பின்னர் ராம்தேவ் டெல்லிக்குள் நுழைய 15 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று டெல்லி வந்தார் ராம்தேவ்.
ராம்லீலா மைதான சம்பவத்தின் போது காயமடைந்து டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது பெண் ஆதரவாளரான ராஜ் பாலா என்பவரைப் பார்ப்பதற்காக டெல்லி வந்தார் ராம்தேவ்.
இன்று காலை ஹரித்வாரிலிருந்து கார் மூலம் டெல்லி வந்த அவர் நேராக ஜி.பி.பந்த் மருத்துவமனைக்குச் சென்று ராஜ் பாலாவைச் சந்தித்து நலம் விசாரித்தார். படுகாயமடைந்துள்ள ராஜ்பாலா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications