டீஸல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்!
சென்னை: டீஸல், கேஸ், மண்ணெண்ணெய் விலையை கடுமையாக உயர்த்தியுள்ள மத்திய அரசைக் கண்டித்து ஒரு வார காலம் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமினழக பாஜக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் மத்திய அரசு, சாதாரண மக்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர், மண்எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் முடிவினால் அடிக்கடி பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை வாட்டி வரும் மத்திய அரசு சற்றும் மக்களை பற்றி சிந்திக்காமல் டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.
கடந்த வருடத்தில் மட்டும் 10 முறை பெட்ரோலிய பொருட்களின் விலையை ஏற்றியுள்ள மத்திய அரசு, சாதாரண மக்களின் அரசு என்று சொல்லிக்கொள்ளும் தகுதியை இழந்துவிட்டது.
ஏற்றியுள்ள டீசல், மண்எண்ணெய், கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்கக்கோரி தமிழக பா.ஜ.க. மாநிலம் முழுவதும் ஒரு வார காலத்திற்கு கண்டன போராட்டங்கள் நடத்தும் என தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications