ஜூலை 2-ம் தேதிக்குள் அமைச்சரவை மாற்றம்- எஸ்.எம். கிருஷ்ணா பதவி பறிப்பு?

மத்திய அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து நேற்று பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்து பேசினார். ஊழல் மேல் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிப்பதால் மத்திய அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகின்றது.
திறமையற்ற அமைச்சர்களை நீக்குவதி்ல் பிரதமர் உறுதியாக உள்ளார். 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது. வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா சர்வதேச அரங்கில் சிற்பபாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால் அவர் மீது மத்திய அரசு கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. எனவே, அவர் பதவி பறிக்ககப்படும் என்று தெரிய வந்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதால் அம்மாநிலத்தைச் சேர்ந்த சிறுபான்மை மற்றும் தலித் இனத்தவர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளி வந்துள்ளன.
அதிலும் குறிப்பாக சல்மான் குர்ஷிதுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதே போன்று காங்கிரஸின் தோழமைக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த இ.அகமதுவுக்கு தனி பொறுப்புடன் கூடிய இலாகா கிடைக்கும் என்று தெரிகிறது.
மேலும், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. சில கூட்டணிக் கட்சிகளிடம் உள்ள இலாகாக்களை திரும்ப்ப பெற பிரதமர் முடிவு செய்துள்ளார். இந்த இலாகாக்களை பெற காங்கிரஸில் போட்டாபோட்டி நடக்கிறது.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வரும் ஜூலை 2-ம் தேதி ஹைதராபாத்திற்கு செல்கிறார். 8-ம் தேதிக்கு பிறகு தான் டெல்லி திரும்புகிறார். இதனால் அவர் புறப்படும் முன்பு ஜூலை 2-ம் தேதிக்குள் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என்று டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications