முதல்வர் ஜெயலலிதாவை 29ம் தேதி சந்திக்கிறது சமச்சீர் கல்வி ஆய்வுக் குழு
சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வி ஆய்வுக் குழு வருகிற புதன்கிழமை முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. முதல் கட்டமாக கடந்த ஆண்டு 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு இது அமல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் இது விரிவுபடுத்தப்படுவதாக இருந்தது.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதிமுக ஆட்சி அமைந்ததும் நடப்பு ஆண்டுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், அடுத்த ஆண்டு இதை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், 1, 6 ஆகிய வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டத்தைத் தொடரலாம். பிற வகுப்புகளுக்கு அமல்படுத்துவது குறித்து நிபுணர் குழு அமைத்து 2 வாரங்களில் ஆராய வேண்டும். அந்த குழு அறிக்கையை உயர்நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதை ஒரு வாரத்திற்குள் விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்தது. தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி தலைமையிலான இக்குழுவில் மொத்தம் 9 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் இதுவரை 3 முறை கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். இதையடுத்து வருகிற புதன்கிழமை முதல்வர் ஜெயலலிதாவை குழுவினர் சந்தித்து இதுவரை நடந்த பேச்சுக்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.
அதன் பின்னர் உச்சநீதிமன்றம் அறிவித்தபடி ஜூலை 6ம் தேதிக்குள் தங்களது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள்.












Click it and Unblock the Notifications