தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 8 வயது சிறுமியை ஈடுபடு்த்திய தலிபான்கள்
காபூல்: ஆப்கானிஸ்தானில் 8 வயது சிறுமியிடம் வெடிகுண்டு கொடுத்தனுப்பிய தலிபான் தீவிரவாதிகள் அந்தச் சிறுமி போலீஸ் சோதனை சாவடியை கடந்து சென்றபோது வெடிக்க வைத்தனர். இதில் அந்த அப்பாவி சிறுமி பலியானாள். சில போலீசார் காயமடைந்தனர்.
ஆப்கானில்தானில் தலிபான்கள் உள்ளிட்ட தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல்கள் மூலம் அமெரிக்கப் படைகள் மீதும், அரசுப் படைகள், காவல் துறையினர் மீதும் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். பொது இடங்களிலும் குண்டு வெடிப்புகளை நடத்தி வருகின்றனர்.
தீவிரவாதிகளை படையினர் தடுத்து வருவதால், இந்தத் தாக்குதல்களுக்கு அப்பாவி இளைஞர்களை பயன்படுத்தி வந்த அவர்கள் தற்போது பெண்களையும், சிறுவர்- சிறுமிகளையும் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடுத்த ஆரம்பித்துள்ளனர்.
இதில் பல சிறுவர், சிறுமியருக்கு தாங்கள் குண்டு கொண்டு செல்கிறோம் என்றே தெரியாது என்பது தான் கொடுமை. இதே போன்ற ஒரு தாக்குதல் தெற்கு ஆப்கானிஸ்தான் உருஷ்கான் மாகாணத்தில் சார்சினோ பகுதியில் உள்ள ஒரு போலீஸ் சோதனை சாவடியில் நடத்தப்பட்டுள்ளது.
தலிபான் தீவிரவாதிகள் வெடிகுண்டு அடங்கிய ஒரு பார்சலை 8 வயது சிறுமியிடம் தந்து அதை போலீஸ் சோதனைச் சாவடி அருகே கொண்டு செல்லக் கூறினர். என்னவென்றே தெரியாத சிறுமி அதை வாங்கிக் கொண்டு சோதனைச் சாவடியை நெருங்கியபோது அந்த குண்டை தீவிரவாதிகள் ரிமோட் மூலம் வெடிக்க வைத்தனர்.
இதில் அந்தச் சிறுமி அந்த இடத்திலேயே பலியானார். சில போலீசார் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications