எதியூரப்பா வீட்டின் முன் உண்ணாவிரதத்தில் குதித்த தேவெ கெளடா
பெங்களூர்: ஹசன் மாவட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு முதல்வர் எதியூரப்பா நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்து பெங்களூரில் உள்ள எதியூரப்பா வீடு முன்பு முன்னாள் பிரதமர் தேவெ கெளடா திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹசன் தொகுதி எம்.பியாக இருக்கிறார் தேவெ கெளடா. பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், எதியூரப்பா அரசு, ஹசன் மாவட்டத்தைப் புறக்கணித்து வருவதாகவும், தான் எம்.பியாக இருப்பதால் ஹசனைக் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும், வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் அலட்சியம் காட்டுவதாகவும் தேவெ கெளடா குற்றம் சாட்டியிருந்தார்.
எதியூரப்பா அரசின் போக்கைக் கண்டித்து எதியூரப்பா வீட்டின் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப் போவதாக அவர் அறிவித்திருந்தார். ஆனால் இதற்குப் போலீஸார் அனுமதி தரவில்லை. மேலும் முதல்வர் வீடு உள்ள ரேஸ்கோர்ஸ்சாலைப் பகுதியில்,144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் தடையைப் பொருட்படுத்தாமல் தேவெ கெளடா முதல்வர் வீட்டுக்கு விரைந்தார். ஆனால் போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து நடு ரோட்டில் தேவெ கெளடாவுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மறுபக்கம் கெளடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா, ஹசன் மாவட்ட மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் பிரகாஷ், சிவலிங்கே கெளடா உள்ளிட்டோர் முதல் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாதம் மூண்டது.
அந்த சமயத்தில் போலீஸ் தடுப்பை மீறி ரேவண்ணா உள்ளிட்டோர் வீட்டுக்குள் நுழைய முயன்றதால் போலீஸார் ரேவண்ணா உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டுசென்றனர்.
மறு முனையில் தேவெ கெளடாவை முதல்வர் வீட்டின் எதிர்புறம் உள்ள வாகன நிறுத்தம் அருகே போய் உட்கார்ந்து கொள்ளுமாறு போலீஸார் அனுமதித்தனர். அந்த இடத்தில் பெரிய குப்பைத் தொட்டி இருந்தது. அதற்கு அருகே போய் உட்கார வேண்டிய நிலைக்கு தேவெ கெளடா தள்ளப்பட்டார். அவருடன் நான்கு பேர் உடன் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர்.
பின்னர் தேவெ கெளடாவுடன் முதல்வரின் முதன்மைச் செயலாளர், செயலாளர் ஆகியோர் பேச்சு நடத்தினர். எழுத்து மூலம் உத்தரவாதம் தரப்பட வேண்டும் என்று கெளடா வலியுறுத்தவே அதேபோல எழுத்து மூலம் எதியூரப்பா தந்த உத்தரவாதம் கெளடாவிடம் தரப்பட்டது. இதையடுத்து அவர் தனது போராட்டத்தை விலக்கிக் கொண்டு கிளம்பிச் சென்றார்.
பிறகு செய்தியாளர்களிடம் கெளடா பேசுகையில், ஐந்து நாட்களில் ஹசன் மாவட்டஆய்வுக் கூட்டத்தை நடத்தவிருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். 5 நாள் வேண்டாம், 7 நாட்கள் கூட எடுத்துக் கொள்ளட்டும். அதற்குள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர்நது போராட்டம் நடத்துவோம் என்றார்.












Click it and Unblock the Notifications