புதுவை சபாநாயகராக சபாபதி போட்டியின்றி தேர்வு: நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
புதுவை: புதுவை சட்டசபை சபாநாயகராக என். ஆர். காங்கிரஸ் வேட்பாளர் சபாபதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும்.
புதுவை சட்டசபை சபாநாயகர் தேர்தல் நாளை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் சபாபதி எம்.எல்.ஏ. வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து எதிர்கட்சிகள் தங்களது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கின.
எதிர்கட்சிகள் சுயேட்சை எம்.எல். ஏ. வி.எம்.சி. சிவக்குமாரை பொது வேட்பாளராக நிறுத்த முடிவு செய்தன. ஆனால் அவரை அணுகியபோது அவர் பல நிபந்தனைகள் விதித்ததால் பொது வேட்பாளர் யோசனை கைவிடப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் தன் கட்சி சார்பில் ஒருவரை நிறுத்த தீர்மானித்தது.
இது குறித்து புதுவை எம்.எல்.ஏ.க்களிடம் கருத்து கேட்டபோது உடன்பாடு எட்டவில்லை. மேலும், சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரங்கசாமிக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். இவர்களை நம்பி தேர்தல் களத்தில் குதிக்க விரும்பாத காங்கிரஸ் கௌரவமாக போட்டியில் இருந்து பின் வாங்கியது.
வேட்மனு தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள். ஆனால் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் சபாபதி போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை நடக்கவிருக்கும் சட்டசபை கூட்டத்தில் வெளியடப்படும்.












Click it and Unblock the Notifications