மதுரை தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு-அப்பீல் மனு நாளை விசாரணை

கடந்த 2007ம் ஆண்டு மே 9ம் தேதி தினகரன் நாளிதழ் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டது. அதில் ஸ்டாலின், கனிமொழியை விட அழகிரிக்கு மிகக் குறைவான ஆதரவே உள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அழகிரி ஆதரவாளர்கள் பொங்கி எழுந்தனர்.
மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகத்தை வெறித்தனமாக தாக்கி பெட்ரோல் குண்டுகளை வீசி தீவைத்துக் கொளுத்தி சூறையாடினர். மதுரையிலும் வன்முறை தலைவிரித்தாடி மக்களை பெரும் பீதிக்குள்ளாக்கியது.
தினகரன் அலுவலகத் தாக்குதலில் தினகரன் அலுவலக கம்ப்யூட்டர் லே-அவுட் பிரிவில் பணியாற்றிய கோபிநாத், வினோத்குமார் மற்றும் பாதுகாவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் கொடூரமாக தீவைத்து உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து செய்தி வெளியிட்ட சன் டிவியும், தினகரன் நாளிதழும், அழகிரியின் ரவுடிகள் நடத்திய வெறியாட்டம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டன.
போலீஸாரின் துணையுடன் தாக்குதல் நடந்ததாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு தொடர்பாக திமுக தொண்டர் அணி அமைப்பாளர் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேர் மீதும், ஊமச்சிக்குளம் டிஎஸ்பியாக இருந்த ராஜாராம் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு பெரும் யோசனைக்குப் பின்னர் சிபிஐயிடம் வழக்கை ஒப்படைத்தது.
விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், 32 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். 85 பேர் சாட்சியமளித்தனர். பட்டப் பகலில் ஊர் அறிய, உலகறிய நடந்த இந்த படு பாதக கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரையும் 2009ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி மதுரை செஷன்ஸ் கோர்ட் விடுதலை செய்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆனால் இந்த வழக்கில் அப்பீல் செய்யாமல் அப்படியே விட்டு விட்டது அரசுத் தரப்பு. இதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. கண்டனங்கள் வலுக்கவே கடந்த 2010ம் ஆண்டு 118 நாள் தாமதத்திற்குப் பின்னர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ அப்பீல் செய்தது.
காலதாமதத்திற்கான காரணத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி சொக்கலிங்கம் பெஞ்ச், அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சம்பந்ததப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த நிலையில் நாளை இந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 கல்லூரி மாணவிகள் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் அதிமுகவினருக்கு மரண தண்டனை கிடைத்தது போல மதுரை சம்பவத்தில் கொடூரமாக 3 பேரைக் கொலை செய்த திமுகவினருக்கும் தண்டனை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications