பொருளாதார நிபுணரான பிரதமர், விலைவாசி உயர்வு, பணவீக்கத்தை கட்டுப்படுத்தாதது ஏன்?- பாஜக கேள்வி

இதுகுறித்து பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறுகையில், பிரதமர் சொல்லும் எதையும் ஏற்க முடியாது. காரணம், தனது தோல்விகளுக்கு நியாயம் கற்பிக்கப் பார்க்கிறார் பிரதமர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறினார், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறினார். ஊழலைக் கட்டுப்படுத்தத் தவறினார். லோக்பால் மசோதா விவகாரத்திலும், ஊழல் ஒழிப்பிலும் அவர் நியாயமாக நடக்கத் தவறினார்.
இத்தனைத் தவறுகளை தன் பக்கம் வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகளை அவர் சாடுகிறார். விலைவாசி உயர்வு குறித்துக் கேட்டால் இந்தியாவில் மட்டுமில்லை, உலகம் முழுவதும் விலைவாசி உயர்ந்து கொண்டுதான் போகிறது என்கிறார்.
இந்த ஆட்சியின் ஊழல்களால்தான் விலைவாசி கடுமையாக உயர்ந்தது என்று கூடச் சொல்லலாம். இந்த ஆட்சியின் ஊழல்களும், விலைவாசி உயர்வுக்கு ஒரு முக்கியக் காரணம்.
மோசமான ஆட்சி, தவறான கொள்கைகள் ஆகியவற்றுடன் இந்த நாட்டையே சீரழித்து விட்டது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2வது ஆட்சி.
100 நாட்களில் விலைவாசியைக் குறைப்பேன் என்று செங்கோட்டையில் முன்பு முழங்கினாரே பிரதமர். அது என்னவாயிற்று?. அதேபோல கடந்த மார்ச் மாதத்திலும் கூட விலைவாசியைக் கட்டுப்படுத்துவேன் என்று கூறினாரே, அது என்னவாயிற்று.
மிகச் சிறந்த பொருளாதார நிபுணராக அறியப்படும் பிரதமரால், தனது பரீட்சையேயே சரியாக எழுத முடியாமல் பெயில் ஆகியுள்ளார். இவர் நாட்டையே ஏமாற்றி விட்டார்.
ஆண்டுதோறும் ரூ. 70,000 கோடி மதிப்பிலான உணவு தானியங்கள் முறையாக விநியோகிக்கப்படாமல் கிட்டங்கிகளில் அழுகிக் கொண்டிருக்கின்றன. இவற்றைக் கொண்டு கோடானு கோடி ஏழைகளின் பசியைத் தீர்த்திருக்க முடியும். அதை இந்த அரசு செய்யவில்லை.
அரசுடன் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பதில்லை என்று பிரதமர் கூறுவதை ஏற்கவே முடியாது. இரு சபைகளிலும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் மிகவும் முக்கியமானவர்கள், அனுபவசாலிகள், திறமையானவர்கள். ஆனால் அரசு அவர்களிடம் ஒரு ஆலோசனையையும் கேட்பதில்லை. குறிப்பாக லோக்பால் மசோதா தொடர்பாக ஒரு வார்த்தை கூட ஆலோசனை கேட்கவில்லை. இப்படி இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகளை எப்படி பிரதமர் குறை கூறலாம் என்று காட்டமாக கேட்டார் நிதின் கத்காரி.












Click it and Unblock the Notifications