5 சீட், 8 சீட்டுக்குப் பறப்பதை விட்டு விட்டு கான்ஷிராம் போல வளர வேண்டு-திருமா.வுக்கு ராமதாஸ் அறிவுரை
சென்னை: அம்பேத்கர் சொன்னதை நாம் மறந்து விட்டோம். 5 சீட், 8 சீட்டுக்காக நாம் ஏன் அலைய வேண்டும். உங்களோடு நானும் வருகிறேன். இனிமேல் சீட்டுக்காக அலைவதை விட்டொழிப்போம் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடந்தது.
பெரியார் திடலில் நடந்த விழாவில் ராதாஸுக்கு அம்பேத்கர் சுடர் விருது, திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு பெரியார் ஒளி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீனுக்கு காயிதே மில்லத் பிறை விருது, எழுத்தாளர் சோலைக்கு காமராஜர் கதிர், மு.சுந்தரராஜனுக்கு அயோத்தி தாசர் ஆதவன் விருது, தணிகை செல்வனுக்கு செம்மொழி ஞாயிறு விருது வழங்கப்பட்டது.
விழாவில் ராமதாஸ் பேசுகையில்,
இந்த ஆட்சியில், கிரைண்டர், மிக்சி முதல் ஆடு, மாடுகள் வரை எல்லாம் இலவசம் வழங்கப்படுகிறது. தலித் மக்கள் ஒன்றுபட்டால் கல்வி புரட்சி ஏற்படும். அம்பானி குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிற தரமான கல்வி தலித் இளைஞர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.
எங்கே தமிழ் என்றால் எங்கேயும் தமிழ் இல்லை. இந்த நிலை மாற உங்களால் முடியும். விடுதலை சிறுத்தைகள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களோடு ஒன்று சேர்ந்து போராடுவோம். நானும் உங்களோடு ஒருவனாக சேருகிறேன்.
உத்தரப் பிரதேசத்தில் கான்ஷிராம், மாயாவதி போல இங்கு திருமாவளவனால் செயல்பட முடியாதா?. 5 சீட்டுக்கும், 8 சீட்டுக்கும் ஏன் ஆலாய் பறக்க வேண்டும். சமூக மாற்றத்தை ஏன் நாம் கொண்டு வரமுடியாது? ஆகவே நாம் ஒன்றுசேர்ந்து போராட வேண்டும் என்றார்.
திருமாவளவன் பேசுகையில்,
ஆடு, மாடுகள் வழங்கும் இலவச திட்டங்களை அறிவித்து மக்களை ஆடு, மாடு மேய்க்க வைக்கிறார்கள். இலவச திட்டங்களுக்கு பதிலாக இலவச கல்வியை வழங்குங்கள் என்றும், சமச்சீர் கல்வி திட்டத்தை கொடுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications