ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு மட்டமான மரச் சாமான்கள் சப்ளை- டான்சி நிறுவன இயக்குனருக்கு சம்மன்
சென்னை: ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு தமிழக அரசின் டான்சி அளித்த மரச்சாமான்கள் அனைத்தும் தரமற்றது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடு்த்து டான்சி நிர்வாக இயக்குனர் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் கோர்ட்டை சுற்றிப் பார்த்தபோது பல வசதிக்குறைவுகளைக் கண்டார். உடனே அதை தனிச்சையான வழக்காக எடுத்துக் கொண்டார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதிகள் பி.ஜோதிமணி, டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உள்ள மரச்சாமான்களின் தரத்தைப்பற்றி அறிக்கை அளிக்குமாறு உயர் நீதிமன்ற பதிவகத்திற்கு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு,
ஜார்ஜ் டவுன் நீதிமன்றங்களுக்கு தமிழக அரசின் டான்சி நிறுவனம் அளித்த மேஜை, நாற்காலி போன்ற அனைத்து மரச்சாமான்களும் தரமற்றவை என்று வக்கீல் சங்கத்தின் தலைவர் ஜி.கிருஷ்ணமூர்த்தி சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள கருத்துகளை உயர் நீதிமன்ற பதிவகம் ஆமோதிக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் டான்சி நிறுவனம் கொடுத்த மரச்சாமான்கள் அதற்குள் உடையும் நிலையில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. எனவே, இந்த வழக்கில் டான்சி நிறுவனத்தைச் சேர்த்து, அதன் நிர்வாக மேலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
தரமற்ற மரச்சாமான்களை ஏன் மாற்றித் தரக்கூடாது? ஐகோர்ட் உத்தரவிட்ட பிறகு, தரமற்ற மரச்சாமான்களை தந்ததால் அவற்றின் பாதிப்புகளுக்கான செலவை டான்சி ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது? ஆகிய கேள்விகளுக்கு அவர் உரிய பதிலை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்.
ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் உள்ள 19 நாற்காலிகளில் 16 உபயோகமற்றவை. 9 வயர் நாற்காலிகளில் 2 உபயோகம் அற்றவை. 17 நீள பெஞ்சுகளில் 10 பயனற்றவை. 18 மேஜைகளில் 10-ல் டிராயர் இல்லை. 9 ஸ்டீல் மேஜைகளில் 7 மேஜைகளுக்கு மேல்பகுதி இல்லை. 4 மரபீரோக்களில் ஒன்றுக்கு கால் இல்லை. மற்ற 2 பீரோக்களுக்கு ராக்' இல்லை.
இந்த சாமான்கள் எல்லாம் அதிக விலையுள்ள தரமான தேக்கு மரத்தால் ஆனவை என்றும், அதை டான்சியே பழுதுபார்க்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை டான்சியே பழுதுபார்த்தால் மீண்டும் பழுதாகித் தான் போகும்.
ஆகையால் இந்த சாமான்களை பழுதுபார்க்கும் பணியையும், செலவையும் பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கவிருக்கிறோம். வீணாய்ப்போன சாமான்களை ஏலத்தில் விட்டு அந்த தொகையை கருவூவத்தில் கொடுக்க வேண்டும்.
இந்த வழக்கை ஜூலை 22-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்று டான்சி நிர்வாக இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும். அதற்குள் உடைந்த சாமான்களை டான்சி மாற்றித் தர வேண்டும்.
உயர் நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலைய பகுதியை சென்னை நகரம் முழுவதும் பரவிக்கிடக்கும் சிறப்பு நீதிமன்றங்கள், நுகர்வோர் நீதிமன்றங்கள், தொழிலாளர் நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் அமைக்க ஏன் உயர் நீதிமன்றத்திற்கு அளிக்கக் கூடாது என்று அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
இந்த நீதிமன்றங்கள் எல்லாம் பேருந்து நிலைய பகுதிக்கு வந்துவிட்டால் உயர் நீதிமன்றத்தில் நிலவும் நெரிசல் குறையும் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications