திருக்கோவில் அன்னதானத் திட்டம்- மேசை, நாற்காலி போட்டு உணவு பரிமாற உத்தரவு
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட திருக்கோவில் அன்னதானத் திட்டத்தை மேம்படுத்தி செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சாப்பாடு பரிமாறும்போது மேசை, நாற்காலி போட்டு தரமான உணவைப் பரிமாற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது இந்தத் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதலில் 63 கோவில்களில் தொடங்கப்பட்ட இத்திட்டம் தற்போது 361 கோவில்களில் நடந்து வருகிறது.
சமீபத்தில் இந்தத் திட்டத்தை ஜெயலலிதா ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு குறைபாடுகள் குறித்து முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து சில உத்தரவுகளை அவர் பிறப்பித்துள்ளார்.
- அன்னதான திட்டத்துக்கு நல்லதரமான அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள், காய்கறிகள் பயன்படுத்தவேண்டும்.
- திருக்கோவில் அன்னதானத்தில் சாதம், பொரியல், கூட்டு, சாம்பார், ரசம், மோர் மற்றும் ஊறுகாய் போன்ற வகைகள் அவசியம் வழங்கப்படுதல் வேண்டும்.
- அன்னதான திட்டத்தில் வழங்கப்படும் உணவு வகைகள் தரமானதாகவும், சுத்தமானதாகவும் இருத்தல் வேண்டும்.
- நிதி வசதி மிகுந்த கோவில்களில், வெள்ளிக்கிழமை மற்றும் விழா நாட்களில் வடை, பாயசம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
- உணவு அருந்தும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவேண்டும்.
- பக்தர்கள் வசதியாக அமர்ந்து உணவருந்த வசதி இருப்பின் டேபிள், சேர் போன்றவை பயன்படுத்தப்படவேண்டும்.
- இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், ஒவ்வொரு இணை ஆணையர் மண்டலத்திலும், பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் போதிய வருவாய் உள்ள கோவில்களில் அன்னதான திட்டம் புதிதாக செயல்படுத்தப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.