காபூல் ஹோட்டலுக்குள் புகுந்து தாலிபான்கள் தாக்குதல்: 21 பேர் பலி- கர்சாய் கண்டனம்
காபூல்: காபூலில் உள்ள ஒரு ஹோட்டலில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்தி்ய தற்கொலைப்படை தாக்குதலில் 21 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்டர்கான்டினென்டல் என்னும் நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இங்கு பெரும்பாலும் வெளநாட்டு பயணிகளும், முக்கிய அதிகாரிகளும் தங்குவர். நேற்று இந்த ஹோட்டலில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு குறி்த்த கருத்தரங்கு நடந்தது. மேலும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பணிகளை அந்நாட்டு படைகளிடமே ஒப்படைக்கும் பணியை மேற்கொண்டுள்ள வெளிநாட்டு அதிகாரிகள் இந்த ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு தாலிபான் தீவிரவாதிகள் திடீர் என்று ஹோட்டலுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். உடனே விருந்தினர்கள் அங்கும், இங்கும் ஓடினர். அதற்குள் விவரம் அறிந்த நோட்டோ படை அங்கு வந்து தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டது.
இந்த சண்டை இன்று அதிகாலை வரை சுமார் 5 மணி நேரம் நீடித்தது. தீவிரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் ஹோட்டலின் ஒரு பகுதி சேதமடைந்தது.
இந்த தாக்குதலில் 9 ஆப்கானிஸ்தானியர்கள், 2 போலீசார் உயிர் இழந்தனர், 18 பேர் காயம் அடைந்தனர். மேலும் இதில் தாலிபான் தீவிரவாதிகள் 9 பேரும் உயிர் இழந்தனர். இதில் துருக்கிய ஏர்லைன் நிறுவனத்தில் விமானியாக இருந்த ஸ்பெயின் நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு தாலிபான் தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர். தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தொலைபேசி மூலம் இந்த தகவலை தெரிவித்தார். இந்த தாக்குதலை அந்நாட்டு அதிபர் ஹமீது கர்சாய் வன்மையாக கண்டித்துள்ளார். தீவிரவாதிகளின் இந்த தாக்குதல்களால் நேட்டோ படைகள் பாதுகாப்பு பொறுப்பை ஆப்கான் படையிடம் ஒப்படைப்பதை தடுக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நிலைமை சீராகிவிட்டது என்பதால் அந்நாட்டு பாதுகாப்பு பொறுப்பை நேட்டோ படை அந்நாட்டிடமே ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications