சேலத்தில் நில அபகரிப்பு: மேலும் ஒரு திமுக நிர்வாகி கைது
சேலம்: சேலத்தில் நில அபகரிப்பு வழக்கில் திமுக நிர்வாகி சிவகுமாரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் அஸ்தம்பட்டி அய்யந்திருமாளிகை பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (40). பி.எஸ்.என்.எல். ஊழியர். இவரது மனைவி மாதேஸ்வரி.
மாதேஸ்வரி தனது கணவருடன் பணியாற்றும் வெங்கடேசன் (40) என்பவரிடம் சிவதாபுரத்தில் 1/2 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். கடந்த ஆண்டு மாதேஸ்வரி திடீர் என்று தற்கொலை செய்து கொண்டார். தன் சாவுக்கு வெங்கடேஷ் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார்.
அதில் வெங்கடேஷ் தன்னை இடத்தை காலி செய்யுமாறு மிரட்டியதால் தான் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக எழுதியிருந்தார். இந்த கடிதத்தை கைபற்றிய போலீசார் தற்கொலைக்கு தூண்டியதற்காக வெங்கடேசனை கைது செய்தனர்.
மாதேஸ்வரி தற்கொலை செய்வதற்கு முன் கடந்த 2009-ம் ஆண்டு கன்னங்குறிச்சி போலீசில் நில மோசடி புகார் ஒன்றை கொடுத்தார். அதில் போலி ஆவணம் மூலம் நிலத்தை விற்பனை செய்து, தனது கையெழுத்தை போலியாக போட்டு, வெங்கடேசும், சிவதாபுரம் பாரதியார் தெருவைச் சேர்ந்த சிவா என்ற சிவக்குமாரும்(40) சேர்ந்து தான் மோசடி செய்தனர் என்று கூறியிருந்தார்.
அந்த வழக்கு நீண்ட நாட்களுக்கு பிறது தற்போது விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை நேற்று சிவக்குமாரை கைது செய்தார். சிவக்குமார் மாநகராட்சி 22-வது வார்டு திமுக கிளை நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சிவக்குமாரை சேலம் ஜே.எம். எண். 4-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே நில அபகரிப்பு வழ்ககில் 2 திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது 3-வது கைது நடவடிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications