முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை-தமிழகத்துடன் பேசத் தயார் என கேரள அமைச்சர் தகவல்
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட மனிதபிமான அடிப்படையில் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று கேரள சட்டபேரவையில் பாசனத்துறை அமைச்சர் பிஜே ஜோசப் வேண்டுகோள் விடுத்தார்.
கேரள சட்டபேரவையில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின்போது பாசனத்துறை அமைச்சர் பிஜே ஜோசப் கூறியதாவது,
முல்லை பெரியாறு அணை மிகவும் பலகீனமாக இருக்கிறது. இது தொடர்பான பரிசோதனையில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெற்று வருகின்றன. இந்த பரிசோதனைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. அது முடிந்ததும் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
இதன் பிறகே உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும். அது கேரளாவுக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறோம்.
முல்லை பெரியாறு விவகாரத்தை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கலாம் என தமிழக சட்டபேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில் கூறப்பட்டுள்ளது. பேச்சு வார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்கவே கேரளா விரும்புகிறது.
எனவே பேச்சு வார்த்தைக்கு கேரளா எப்போதும் தயாராகவே இருக்கிறது. அணை உடைந்தால் 30 லட்சம் மக்களின் வாழ்க்கை கேள்வி குறியாகிவிடும்.
எனவே புதிய அணை கட்டுவதற்கு மனிதாபிமான அடிப்டையில் கேரளாவுக்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும். புதிய அணை கட்டப்பட்டாலும் தொடர்ந்து தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கப்படும் என்றார் ஜோசப்.












Click it and Unblock the Notifications