புலிகளின் ரூ 1800 கோடிக்கு குறி வைக்கும் ராஜபக்சே குடும்பம்!

தனி ஈழம் கேட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் போராடிய விடுதலைப்புலிகள் அமைப்பு, வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மூலமும், கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தியதன் மூலமும் பணம் சேர்த்து வந்தது.
இந்தப் பணத்தில் ஒரு பகுதி ரூ.1800 கோடி வரை, வெளிநாட்டு வங்கிகளில் வைப்பு நிதியாக உள்ளது என செய்திகள் வெளியாகின.
உலகின் 5 முக்கிய நாடுகளின் 8 முன்னணி வங்கிகளில் வைப்பு நிதியாக இந்தத் தொகை வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் அதிக அளவு பணம் சுவிட்சர்லாந்து வங்கிகளில்தான் உள்ளது.
சமீபத்தில் கனடா போலீசார் அங்குள்ள வங்கிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 4 பெரிய வங்கிகளில் புலிகளுக்கு கணக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் தமிழ் அமைப்புகளை சேர்ந்த 21 முக்கிய பிரமுகர்கள் பற்றிய தகவல்களும் சேகரிக்கப்பட்டன.
இதுபோன்று நெதர்லாந்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணையின் போதும் வங்கி கணக்குகள் பற்றிய விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்த தகவல்களை முழுமையாகக் கொடுத்தவர் இப்போது ராஜபக்சேவின் நெருங்கிய நண்பனாக மாறிவிட்ட கேபி எனும் குமரன் பத்மநாபனே.
வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள இந்த பணத்தை கைப்பற்ற சிங்கள அரசு தீவிரமாக உள்ளது. குறிப்பாக ராஜபக்சே குடும்பத்தினர் இந்தப் பணத்தை கைப்பற்றிவிடுவார்கள் என சிங்கள அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இறுதிப் போர் நடந்த வன்னிப் பகுதியில் புலிகள் வைத்திருந்த டன் கணக்கான தங்கத்தையும், ரொக்கப் பணத்தையும் மொத்தமாக சுருட்டிக் கொண்டது ராஜபக்சே குடும்பம் என ஏற்கெனவே பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications