தமிழக போலீஸ் அதிகாரிகளில் 20 பேர் கோடீஸ்வரர்கள்: ரியல் எஸ்டேட்டில் முதலீடு
சென்னை: தமிழக காவல்துறை அதிகாரிகளில் 20 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரிய வந்துள்ளது.
தமிழக காவல்துறையில் மொத்தம் 169 அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 20 பேர் கோடீஸ்வரர்கள். தமிழக காவல் துறை அதிகாரிகள் தங்கள் சொத்து விவர பட்டியலை வெளியிட்டனர். அதில் இருந்து தான் இந்த தகவல் கிடைத்துள்ளது.
இந்த கோடீஸ்வர பட்டியலில் தமிழக செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன ஐ.ஜி. ஏ.கே.விஸ்வநாதன் ரூ.15 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார். இவை அனைத்தும் தன் தாய் மற்றும் மனைவி மூலம் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை டிஜிபி போலோநாத், சிபிசிஐடி ஏடிஜிபி ஆர்.சேகர், நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி டி.ராஜேந்திரன் ஆகியோர் ரூ.3 கோடிக்கும் மேற்பட்ட சொத்து மதிப்புடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதி ரூ. 2.8 கோடி மதிப்புள்ள சொத்துகள் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த 4 கோடீஸ்வர அதிகாரிகளும் மாதம் ரூ. 70 முதல் 80 ஆயிரம் வரை சம்பளம் வாங்குகின்றனர்.
இவர்கள் அனைவரும் தங்கள் வருமானத்தை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளனர். டிஜிபி போலோநாத்துக்கு டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வீடுகள் உள்ளன.
சிபிசிஐடி ஏடிஜிபி சேகருக்கு சென்னை அண்ணா நகரில் ரூ.1.2 கோடி மதிப்பிலும், நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி டி.ராஜேந்திரனுக்கு பெசன்ட் நகரில் ரூ.75 லட்சம் மதிப்பிலும் வீடுகள் உள்ளன.
'ஏழை' அதிகாரிகள்!
ஒரு புறம் சில அதிகாரிகள் கோடிக்கணக்கில் சொத்துகள் வைத்திருக்க மறுபக்கம் மேற்கு மண்டல ஐஜி பி.சிவனாண்டி தனக்கு சொத்துகள் எதுவும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல டிஜிபி லத்திகா சரண் தனக்கு வெறும் ரூ. 11 லட்சம் மதிப்பிலான சொத்துக்களே உள்ளதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications