ஊனத்தைக் காட்டி எம்.பி.பி.எஸ். சீட் மறுப்பு: மாற்றுத் திறனாளி மாணவி வழக்கு
மதுரை: உடல் ஊனத்தை காரணம் காட்டி மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள திண்டுக்கல் மாணவி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி வானதி. இடது கை ஊனமுற்றவர். வானதி, தனது குறைபாட்டை பொருட்படுத்தாமல் சிறுவயதிலிருந்தே கல்வியில் சிறந்த மாணவியாக இருந்து வந்தார்.
தனது வலது கையை பயன் படுத்தி விளையாட்டுப் போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார். ஒரு கையை வைத்தே சைக்கிளும் ஓட்டுகிறார். தினமும் பள்ளிக்கு சைக்கிளில் தான் சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுவயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் படித்து வந்த, மிகவும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த வானதி பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 1139 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதனையடுத்து எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் ஒதுக்கக் கோரி விண்ணப்பித்தார்.
மேலும், மருத்துவப் படிப்புக்கான கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 191 பெற்றார். ஆனால் கலந்தாய்வுக்கான பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த வானதி தனக்கு மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications