நில ஆக்கிரமிப்பு வழக்கு- கோர்ட்டில் சரணடைந்தார் மதுரை மேயர் தேன்மொழி
மதுரை: நில ஆக்கிரமிப்பு வழக்கில் சிக்கியுள்ள மதுரை மாநகராட்சி திமுக மேயர் தேன்மொழி கோபிநாதன் இன்று மதுரை கோர்ட்டில் சரணடைந்து முன்ஜாமீன் பெற்றார்.
மதிச்சியத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய மேயர் தேன்மொழி, மதுரை மாநகராட்சி ஆணையர் செபாஸ்டியன் உள்ளிட்டோர் உடந்தையாக இருந்ததாக வக்கீல் ஜெயராம் என்பவர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தேன்மொழி உள்ளிட்ட 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி தேன்மொழி உயர்நீதிமன்றக் கிளையை நாடினார். இதை விசாரித்த உயர்நீதிமன்றக்கிளை, மதுரை செஷன்ஸ் கோர்ட்டில் சரணடைந்து முன்ஜாமீன் பெறலாம் என உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று 2வது மாவட்ட கோர்ட்டில் தேன்மொழி சரணடைந்து முன்ஜாமீன் பெற்றார்.












Click it and Unblock the Notifications