சோனியாவுடன் அன்னா ஹஸாரே சந்திப்பு-இறங்கி வருவாரா சோனியா?

லோக்பால் மசோதா தொடர்பான தனது கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார் ஹாஸாரே. பாஜக தலைவர்கள், இடதுசாரி தலைவர்கள், சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோரை இதுவரை சந்தித்துள்ளார்.
சோனியா காந்தியை சந்திக்கவும் அவர் முயன்றார். நேற்று முன்தினமே அவர் சோனியாவை சந்தித்திருக்க வேண்டும். ஆனால் சோனியா தரப்பில் டைம் தரப்படவில்லை. இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு சந்திக்க வருமாறு சோனியா தரப்பிலிருந்து கூறப்பட்டிருந்தது.
அதன்படி இன்று மாலை அன்னா ஹஸாரே மற்றும் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் அடங்கிய குழு சோனியா காந்தியை சந்தித்தது. சோனியாவுன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, மோஷினா கித்வாய், ஜனார்த்தன் திவிவேதி ஆகியோரும் உடன் இருந்தனர்.
சந்திப்புக்குப் பின்னர் அன்னா ஹஸாரேவும், அரவிந்த் கேஜ்ரிவாலும் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த சந்திப்பு உருப்படியானதாக இருந்தது. லோக்பால் மசோதா குறித்து விவாதித்தோம்.
அரசின் லோக்பால் மசோதா மற்றும் எங்களது கோரிக்கை ஆகியவற்றில் மொத்தம் 16 பிரச்சினைகள் குறித்து அவரிடம் விவாதித்தோம். அரசு தயாரித்துள்ள வரைவு மசோதாவில் எங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ள 6 அம்சங்கள் குறித்து எடுத்துக் கூறினோம்.
மொத்தத்தில் சரியான வரைவு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதை அவரிடம் வலியுறுத்தினோம்.
சரியான மசோதா தாக்கல் செய்யப்படாவிட்டால் நாங்கள் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 16ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்போம் என்றனர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தலைவர் என்ற முறையில் சோனியாவின் ஆதரவு முக்கியமானது என்பதால் அன்னா, சோனியா சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
லோக்பால் வரையறைக்குள் பிரதமரை சேர்க்க வேண்டும் என்பதே அன்னா குழுவினரின் முக்கியக் கோரிக்கையாகும். இதை காங்கிரஸும் சரி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் சரி ஏற்காமல் இழுத்தடித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications