நடிகை மரியா சூசைராஜை சமூகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும்-குரோவரின் தாயார்

மும்பையில் டிவி தொடர் தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் கொலை வழக்கில் சிக்கி கடந்த 3 வருடமாக சிறையில் இருந்து வந்த நடிகை மரியா சூசைராஜ் விடுதலையாகி விட்டார். இது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
இந்த விடுதலை குறித்து நீரஜ் குரோவரின் தாயார் நீலம் குரோவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் குமுறலுடன் பேசுகையில், மரியாவும், அவரது குடும்பத்தினரும் சமூ்கத்தால் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும். அவருடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.
இன்று கோர்ட் மரியாவை சாதாரண தண்டனையுடன் விடுவித்து விட்டது. ஆனால் அவரை சமூகம் சும்மா விடக் கூடாது. அவருக்கு கடுமையான பாடம் கற்றுத் தர வேண்டும். அப்போதுதான் இனிமேல் யாரும் இதுபோன்ற கொடிய குற்றத்தை செய்ய முன்வர மாட்டார்கள்.
நான் அப்பாவி என்கிறார் மரியா. நிரபராதி என்கிறார். அப்படியானால் எனது மகன் கொல்லப்பட்ட நாளின்போது என்ன நடந்தது என்பதை அவர் முழுமையாக, வெளிப்படையாக சொல்ல முன்வர வேண்டும்.
அவர் மும்பையில் செய்தியாளர்கள் முன்பு நன்றாக நடித்து விட்டுப் போயுள்ளார். ஆனால் எனது மகனின் ஆவி கூட அவரை சும்மா விடாது.
கொலைகாரியான மரியாவுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறது. இது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. அப்பாவி மக்களை காக்காத இந்த போலீஸ், குற்றம் புரிந்தவர்களுக்கு பாதுகாப்பு தருவது வேதனையாக உள்ளது என்றார் நீலம்.
நீரஜ் குரோவரின் தந்தை அமர்நாத் குரோவர் கூறுகையில், மிகக் கொடூரமான குற்றவாளியாக இருந்தாலும் கூட அவன் இறந்தால் அவனது மத சம்பிரதாயப்படி இறுதிச் சடங்குகள் செய்கிறார்கள். ஆனால் எனது மகனுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டது. அதற்குக் காரமம் மரியாதான்.
மரியா மும்பையை விட்டுச் செல்ல அனுமதிக்கக் கூடாது. அவரை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும். அவருக்கு உரிய தண்டனை கிடைக்கும் வரை விட மாட்டோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications