சாய்பாபா ஆசிரம அலுவலக அறையில் மேலும் தங்க நகைக் குவியல்
அனந்தப்பூர்: மறைந்த சாய்பாபா பயன்படுத்தி வந்த ய்ஜூர்வேத மந்திர் என்ற அவரது தனி அறையில் பெருமளவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் குவியல் குவியலாக இருந்ததை ஆந்திர மாநில அரசு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
யஜூர்வேத மந்திர் அறை சமீபத்தில்தான் சாய்பாபா ஆசிரம குழுவினரால் திறக்கப்பட்டது. அப்போது அங்கிருந்து பல கோடி பணம் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை வங்கியில் டெபாசிட் செய்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் பல லட்சம் பணத்தை போலீஸார் வாகனம் ஒன்றிலிருந்து மீட்டனர். அந்த வாகனம் புட்டபர்த்தி சாய்பாபா அறக்கட்டளைக்குச் சொந்தமானதாகும். விசாரணையில் அவை யஜூர்வேத மந்திரிலிருந்து கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் யஜூர்வேத மந்திரில் அரசு சோதனை நடத்த உத்தரவிட்டது. அதன்பேரில் அனந்தப்பூர் மாவட்ட இணை கலெக்டர் அனிதா ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ரூ. 1 கோடிக்கு மேலான மதிப்பு கொண்ட தங்கம், வைரம், வெள்ளி நகைகளை அவர்கள் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர்.
மொத்தம் 905 கிராம் தங்க நகைகள், 116 கிலோ வெள்ளிப் பொருட்கள், ஒரு வைர மோதிரம் ஆகியவை சிக்கியதாக தெரிகிறது.
தங்க நகைகளின் மதிப்பு ரூ. 15.85 லட்சமாகும். வைர மோதிரத்தின் மதிப்பு ரூ. 3.9லட்சமாகும். வெள்ளிப் பொருட்களின் மதிப்பு ரூ. 54.96 லட்சமாகும்.
சோதனை குறித்து அனிதா ராமச்சந்திரன் கூறுகையில், நாங்கள் சாய்பாபாவின் அறைகளையும், அவருடைய உதவியாளர் சத்யஜித்தின் அறைகளையும் சோதனை செய்து பார்த்தோம். மேலும் சிறப்பு அலுவலக அறை, டைனிங் ஹால் ஆகியவையும் சோதனைக்குட்படுத்தப்பட்டது. சாய்பாபா அறைக்கு அருகே அதை ஒட்டியிருந்த சிறிய அறையில்தான் தற்போதைய பொருட்கள் கிடைத்தன. இந்தப் பொருட்கள் வங்கியில் டெபாசிட் செய்யப்படும் என்றார்.
அரசு அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்கள் ரத்னாகர், கிரி, சக்ரவர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications