தனுஷ்கோடியில் மீனவர்களைப் பிடித்து கச்சத்தீவில் வைத்து மிரட்டி அனுப்பிய இலங்கை கடற்படை
இலங்கை கடற்படையினரின் இந்த அட்டகாசத்தால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர்.
இன்று காலை தனுஷ்கோடி அருகே நாலாம் திட்டு என்ற இடத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை காடையர்கள், தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் படகில் இருந்த 14 மீனவர்களையும் அவர்களது படகோடு சேர்த்து கடத்திச் சென்று விட்டனர்.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீனவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படை ரவுடிக் கும்பல், தமிழக மீனவர்களை இலங்கைக்குக் கொண்டு செல்லவில்லை. மாறாக கச்சத்தீவுக்குக் கொண்டு போயுள்ளனர்.
அங்கு வைத்து விசாரணை என்ற பெயரில் தமிழக மீனவர்களை கடுமையாக மிரட்டியுள்ளனர். பின்னர் இனிமேல் வரக் கூடாது என்று கடுமையாக மிரட்டி திருப்பி அனுப்பியுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த அடாவடி நடவடிக்கையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர்.
கச்சத்தீவு பக்கம் போனாலும் பிடிக்கிறார்கள் இலங்கை கடற்படையினர். தனுஷ்கோடி அருகே பிடித்தாலும் பிடிக்கிறார்கள். இந்திய அரசு வாயை மூடிக் கொண்டு, கையைக் கட்டிக் கொண்டு கம்மென்று இருக்கிறது. இந்திய கடற்படை இதையெல்லாம் கண்டும் காணாமலும் கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.