காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிதி: ப.சிதம்பரம் மீது மணிசங்கர் அய்யர் பாய்ச்சல்
மதுரை: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிதி ஒதுக்கீடு தொடர்பாக தான் அனுப்பிய எச்சரிக்கை கடிதத்தை அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் அலட்சியப்படுத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு மணிசங்கர் அய்யர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு ஒதுக்கப்படும் மானியத்தை விளையாட்டுத் துறையே நேரடியாக ஒதுக்கீடு செய்து வந்தது. இதனால் முறைகேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம் பொதுநிதி விதி மீறப்படுகிறது என்று சுட்டிக்காட்டி அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திற்கு பல கடிதங்கள் எழுதினேன். ஆனால் அவர் எனது கடிதத்தின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான நிதியை, நிதித்துறை தான் நேரடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என எனது கடிதத்தில் குறிப்பி்ட்டு இருந்தேன்.
ஆனால் அந்த கோரிக்கையை ப.சிதம்பரம் கண்டுகொள்ளதாது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் மீது அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications