தமிழகத்தில் மகள் கடத்தல்-முதல்வரின் உதவி கோரும் துபாயில் வசிக்கும் தந்தை
துபாய்: துபாயில் பணிபுரிந்து வரும் கூலித்தொழிலாளி ராஜேந்திரன் என்பவர், தமிழகத்தில் கடத்தப்பட்ட தனது மகளை கண்டுபிடித்து தருமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் ராஜேந்திரன். இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் செம்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர்.
இவருக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்த மகள் பூஜா (16). பெண்ணாடம் தாகூர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். 13.06.2011 அன்று காலை படிப்பு சான்றிதழ் வாங்கி வருவதாக சென்றவரை காணவில்லை. ஐந்து பவுண் நகை அணிந்திருந்தார்.
இவரை கடத்தியவர்கள் என்று கருதப்படும் 3 ஆண்கள், 2 பெண்களின் விவரத்துடன் பெண்ணாடம் காவல் நிலையத்தில் 14.06.2011 அன்று புகார் அளித்தும், 17ம் தேதி தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. எனினும் இதுவரை பூஜா காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்படவில்லை.
இது குறித்து மேலதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது தனக்கு மிகுந்த வேதனையளிப்பதாக ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள் இருப்பதால் காவல்துறை இவ்விஷயத்தில் சுணக்கம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே கருணையுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் இவ்விஷயத்தில் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்து காணாமல் போன தனது மகளை விரைவாக கண்டுபிடித்து தர கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications