மாணவர்களின் சிந்தனையை வளர்க்கும் வகையில் சமச்சீர் கல்வி புத்தகம் இல்லை-ஆய்வுக் குழு அறிக்கை

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் இந்த அறிக்கையை தாக்கல் செய்தார்.
சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது.
அப்பீலை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக ஆய்வுக் குழுவை நியமித்து ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதன்பேரில் ஆய்வுக் குழு ஆய்வு நடத்தி வநத்து. மொத்தம் நான்கு முறை கூடி குழு உறுப்பினர்கள் 9 பேரும் தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி தலைமையில் ஆலோசனை நடத்தினர்.
இதன் இறுதியில் அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கையை இன்று முற்பகல் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு தாக்கல் செய்தார்.
இதையடுத்து அறிக்கையின் நகல்கள், சமச்சீர் கல்வி கோரும் மனுதாரர்களுக்கும் வழங்கப்பட்டது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?
500 பக்கங்களைக் கொண்டதாக இந்த அறிக்கை உள்ளது. அதில்,
நடப்பு கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வியை செயல்படுத்த முடியாத அளவுக்கு குறைகள் உள்ளன. கல்விக்கான தேசிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) 2005-ல் வடிவமைத்தை தேசிய பாடத்திட்டம் வடிவமைப்புக்கு ஏற்ப சமச்சீர் பாடத் திட்டங்கள் தரமானதாக இல்லை. அதற்கு இணையாகத் தயாரிக்கப்படவில்லை. அவசர கோலத்தில் இந்த பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
மெட்ரிக்குலேசன் தரத்திற்கு சில பாடங்கள் அமைந்துள்ளன. இதனை மாணவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்ததில் தவறுகள் நிறைந்துள்ளன. மொழி பாடத்தில் இலக்கண பிழைகள், கருத்து பிழைகள் உள்ளன.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. ஆகவே இந்த சமச்சீர் பாடத் திட்டத்தை கொண்டு இந்த கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வியை நடைமுறைப் படுத்த இயலாது. இந்த பாடத்திட்டம் முழுமையாக திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழன் முதல் தினசரி விசாரணை
அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து வியாழக்கிழமை முதல் இதன் மீதான விசாரணை தொடங்கும் என்று தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் அறிவித்தார். தினசரி விசாரணை நடைபெறும். ஒரு வாரத்திற்குள் இதன் மீது தீர்ப்பு அளிக்கப்படும்.
அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் சமச்சீர் கல்வி பாடத் திட்டம் தொடருமா, அல்லது பழைய பாடத் திட்டம் தொடருமா என்பது தெரிய வரும். அதன் பின்னரே 1 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களைத் தவிர மற்றவர்களுக்குரிய பாடப் புத்தகங்களை மாநில அரசு முடிவு செய்யும்.












Click it and Unblock the Notifications