முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மகன் மீது நில அபகரிப்பு வழக்கு
சேலம்: முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், வீரபாண்டி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜா மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது பல தனியார் நிலங்கள், திமகவினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இதனால் தேர்தல் பிரசாரத்தின் போது திமுகவினர் ஆக்கிரமிப்பு செய்த நிலங்கள் அனைத்தும் மீட்டுத்தரப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். இதனால் தற்போது திமுகவினர் மீது நில மோசடி புகார் எழுந்தவண்ணம் உள்ளது.
மாவட்டம் தோறும் பொது மக்களிடம் நில ஆக்கிரமிப்பு குறித்த புகார்களை பெறும் வகையில், காவல் துறையில் நில அபகரிப்பு மீட்பு தனிப் பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 1-ம் தேதி சேலம் பெரிய கொல்லப்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார்(50) என்பவரிடம் இருந்து சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு மனு வந்தது. அதில் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ஆ.ராஜாவும் (முன்னாள் எம்.எல்.ஏ.), சேலம் சங்கர் நகரை சேர்ந்த தங்கவேல் என்ற சூரிய தங்கவேல் ஆகியோர் அபகரித்துவிட்டதாக கூறியிருந்தார்.
இந்த புகார் கடந்த 4-ம் தேதி சேலம் மாநகர நில அபகரிப்பு மீட்பு குழுவுக்கு கிடைத்தது. இதையடுத்து இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நில அபகரிப்பு குறித்து போலீசார் கூறியதாவது:
புகார் கொடுத்துள்ள முத்துகுமாருக்கு ஜாகீர் அம்மாபாளையத்தில் சொந்தமாக 4.41 ஏக்கர் நிலம் உள்ளது. இதை அவர் கடந்த 1973-ம் ஆண்டு முதல் அனுபவித்து வருகிறார். இதில் 3 ஏக்கர் நிலத்திற்கு முத்துக்குமாருக்கு தெரியாமலேயே சரவணன் என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து, விற்கும் உரிமையை (பவர்) ஏற்பாடு செய்து, சேலம் சங்கர்நகர் ஹரே கிருஷ்ணாசாலையைச் சேர்ந்த தங்கவேல் என்ற சூரிய தங்கவேலுக்கு 29-10-2009 அன்று சார் பதிவாளர் அலுவகத்தில் வைத்து கிரையம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி அறிந்த உடன் முத்துக்குமார் சூரிய தங்கவேலுவை சந்தித்து என்னுடைய இடத்தை எனக்கே தெரியாமல் எப்படி வாங்கினாய் என்று கேட்டு தகராறு செய்துள்ளார். உடனே சூரிய தங்கவேலு கிரைய பத்திரத்தை எடுத்துக் காட்டியுள்ளார்.
உடனே முத்துக்குமார் இந்த மோசடி குறித்து சேலம் சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். இருப்பினும் சூரிய தங்கவேல் அடியாட்களுடன் வந்து நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றுள்ளார். பின்னர் சேலம் உரிமையியல் நீதிமன்றத்தில் இது குறி்த்து சூரிய தங்கவேல் வழக்கு தொடர்ந்தார். அதி்ல நிலத்தை தான் வாங்கியுள்ளதாகக் கூறி, அதற்கான ஆவணங்களையும் சமர்பித்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சூரிய தங்கவேலுக்கு ரூ. 15 லட்சத்து 5 ஆயிரம் கொடுத்து முன்னாள் திமுக எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா அந்த 3 ஏக்கர் நிலத்தை கடந்த மே மாதம் வாங்கி சூரமங்கலம் துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து பத்திரப்பதிவு செய்தார்.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை இருக்கையில் பிரச்சனைக்குரிய நிலத்தை சூரிய தங்கவேல் வீரபாண்டி ராஜாவுக்கு விற்பனை செய்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
முத்துக்குமாரின் புகாரின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா, சூரிய தங்கவேல் ஆகியோர் நில அபகரிப்பு செய்ததற்காக இ.பி.கோ. 441, 387, 420 ஆகிய 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications