ஸ்ரீரங்கம் கோவிலிலும் தங்கப் புதையல்? ஆய்வு செய்ய கோரிக்கை
திருச்சி: திருவனந்தபுரம் பத்பநாப சுவாமி கோவிலின் பாதாள அறைகளில் இருந்து ரூ. 1 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கக் குவியல்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதே போன்று ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலிலும் வி்லை உயர்ந்த பொருட்கள் கொண்ட புதையல் இருப்பதாகவும், அது பற்றி ஆய்வு செய்யுமாறும் கோரிக்கை எழுந்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்பநாப சுவாமி கோவிலின் பாதாள அறைகளில் இருந்து தங்க, வைர, வைடூரிய நகைகள், பொற்காசுகள், சாமி சிலைகள் என ரூ. 1லட்சம் கோடி மதிப்புள்ள புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலை விட பத்மநாப சுவாமி கோவில் தான் பணக்கார கோவிலாக ஆகியுள்ளது.
இந்த நகைகள் அனைத்தும் திருவிதாங்கூர் மன்னர்களால் கோவிலுக்கு நன்கொடையாக கொடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. இந்நிலையில ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலிலும் வி்லை உயர்ந்த பொருட்கள் கொண்ட புதையல் இருப்பதாகவும், அது பற்றி ஆய்வு செய்யுமாறும் கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் அங்குள்ள கல்வெட்டுகள் குறித்து ஆய்வு செய்யும் கிருஷ்ணமாச்சாரியார் இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது,
ஸ்ரீரங்கம் கோவில் கி.பி.1736-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 48 வருங்களுக்கு ஆபத்துகளை சந்தித்தது. இது பற்றி ஆய்வு செய்கையில் புதுச்சேரி அனந்தரங்கம் நாட் குறிப்பை படிக்க நேர்ந்தது. 1755-ம் ஆண்டு பிரெஞ்சு படையினர் ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்த விலை உயர்ந்த ஆபரணங்கள், பொற் காசுகள் அடங்கிய ஸ்ரீபண்டாரத்தை கொள்ளையடிக்க வந்தனர்.
இது அந்த நாட்குறிப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குறிப்புகள் மூலம் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் கோவிலில் ஆலிநாடன், திருச்சுற்றில் உள்ள கருடர் சன்னதிக்கு பின்புறம் அந்த ஆபரணங்களையும், பொற் காசுகளையும், அப்போதைய ஸ்தலதாரர்கள் பாதுகாப்பாக வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போதுள்ள நவீன கருவிகள் மூலம் கருடன் சன்னதிக்கு எந்தவித சேதமும் ஏற்படாமல் அந்த புதையல் பற்றி தெரிந்து கொள்ளலாம். எனவே, இதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications