நாங்குநேரி அருகே கர்ப்பிணி கழுத்தை நெறித்துக் கொன்ற கணவர் கைது
நாங்குநேரி: நாங்குநேரி அருகே கர்ப்பிணி கழுத்தை நெறித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே பரப்பாடி பக்கமுள்ள பாண்டிசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. மோகன்தாஸ் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவர்களது திருமணத்தின்போது சுதாவின் பெற்றோர் 15 பவுன் நகை சீதனமாக கொடுப்பதாக கூறியுள்ளனர். அதில் 8 பவுன் நகையை திருமணத்தின் போதும், மீதி 7 பவுன் நகையை பின்னர் தருவதாகவும் கூறினர். ஆனால் அந்த நகையை சுதாவுக்கு அவரது பெற்றோர் போடவில்லை. இந்நிலையில் சுதா தற்போது 3 மாதம் கர்பபமாக இருந்தார்.
அந்த நேரத்தில் கணவர் மோகன்தாசுக்கு குடிபழக்கம் இருப்பது தெரிய வந்தது. தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் கணவரை சுதா தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மோகன்தாஸ் மனைவி சுதாவை அடித்து துன்புறுத்தினார்.
மேலும் திருமணத்துக்கு பிறகு போடுவதாக கூறிய 7 பவுன் நகை போடாதாதது குறித்துக் கேட்டும் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மோகன்தாஸ் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். போதை தலைக்கு ஏறியதும் வழக்கம்போல் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்துள்ளார்.
அப்போது மோகன்தாஸ் சுதாவின் கழுத்தை நெரித்து கீழே தள்ளினார். இதில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே சுதா இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், வடக்கு விஜயநாராயணம் இன்ஸ்பெக்டர் இளங்கோ, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சுதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து மோகன்தாசை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications