இரட்டைமலை சீனவாசன் பிறந்தநாளை, அரசு விழாவாக்கிய ஜெ.வுக்கு சீமான் நன்றி
சென்னை: இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பி்ல் அதன் தலைவர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், அவர்கள் சம உரிமை பெற்று கண்ணியமாக வாழவும் தன் வாழ் நாள் முழுவதும் போராடிய சமூகப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளை தமிழக அரசு விழாவாக நடத்தும் என்று அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
சாதியம் தமிழ் மக்களின் சமூக வாழ்வை சீரழிக்கும் கொடுமையான வழக்கமாக இன்று வரை நீடித்து வருகிறது.
தமிழின ஒற்றுமைக்கும், மேம்பாட்டிற்கும் சாதிய மனப்போக்கு பெரும் தடையாகவும் இருக்கிறது. அப்படிப்பட்டக் கொடுமை கடுமையாக நடைமுறையில் இருந்த 19-வது நூற்றாண்டில் பிறந்த தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் இளமைக் காலந்தொட்டு போராடினார்.
'பறையர்" என்ற இதழையும், 'ஆதி திராவிட மகா ஜன சபை" என்ற அமைப்பையும் தொடங்கி தாழ்த்தப்பட்டோர் சம உரிமை பெற போராடிய அவர், மகாத்மா காந்தியோடும், பிறகு பாபா சாகேப் அம்பேத்காருடனும் இணைந்து பணியாற்றியவர்.
அப்படிப்பட்ட உன்னதமான தலைவரின் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்தது மிகச் சரியான நடவடிக்கை என்பது மட்டுமின்றி, அவரைப் பற்றிய அறிதல் மூலம் சாதியத்தின் கொடுமையை இன்றைய இளைய தலைமுறையினர் அறியவும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று நாம் தமிழர் கட்சி கருதுகிறது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications