திருச்செந்தூர் திருவாரூர் கோவில்களிலும் ரகசிய அறைகள்?- நகைகளை வெளிக்கொணர கோரிக்கை
சென்னை: திருச்செந்தூரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலிலும், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலிலும் உள்ள ரகசிய அறைகளை திறந்து அங்கிருப்பதாக கூறப்படும் அரிய நகைகளை வெளிக் கொணர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவிதாங்கூர் சமஸ்தானம்:
திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிதாங்கூர் சமாஸ்தானத்தோடு தொடர்புடையதாகும். மன்னர் உதய மார்த்தாண்ட வர்மாதான் சுப்ரமணிய கோவிலுக்குத் தேவையான செல்வங்களை வழங்கி நித்ய பூஜை செய்வதற்குத் தேவையான நம்பூதிரிகளையும் அனுப்பி வைத்ததாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே சுப்பிரமணிய சுவாமிக்கு அதிகாலையில் உதயமார்த்தாண்ட அபிஷேகம் செய்யப்படுகிறது.
திருவிதாங்கூர் மன்னர் தங்க, வைர நகைகளை கோவிலுக்கு அளித்ததற்கான வரலாற்று சான்றுகள் உள்ளன. இந்த நகைகள் அனைத்தும் மூலவருக்கு அருகில் உள்ள ரகசிய அறைகளில் பாதுகாக்கப்படுவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
வீராபாண்டிய கட்டபொம்மன்:
பாஞ்சாலங்குறிச்சியை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் சுப்ரமணிய சுவாமியின் தீவிர பக்தர் ஆவார். இவர் திருச்செந்தூருக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் போது ஏராளமான ஆபரணங்களை வழங்கியதாகவும் பக்தர்கள் கூறியுள்ளனர்.
திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு சுரங்கப் பாதை இருந்ததாக கூறும் பக்தர்கள் அந்த பாதையில் இருந்த அறைகளில் தங்க வைர நகைகள் பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இந்த ரகசிய அறைகளை திறந்து அவற்றில் உள்ள நகைகளை வெளிக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் தியாகராஜ சுவாமி:
இதனிடையே திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் கல் திரையிட்டு மூடப்பட்ட இரண்டு ரகசிய அறைகள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மொகலாயர், ஆங்கிலேயர் படையெடுத்து வந்த காலங்களில் கோவில் நகைகள் அனைத்தையும் அந்த ரகசிய அறைகளில் பாதுகாத்து வைத்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு நடவடிக்கை:
கர்ப்ப கிரகத்தின் பின்புறம் உள்ள இந்த அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளன. இந்த அறைகளில் உள்ள நகைகளை வெளியே கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதே போல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பழங்கால சைவ, வைணவ ஆலயங்களில் காணப்படும் ரகசிய அறைகளை ஆராய்ந்து கோவில் நகைகளை கணக்கெடுக்க வேண்டும் என்றும் வரலாற்று
ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications