ஜூன் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 46% அதிகரிப்பு!
டெல்லி: இந்தியாவின் ஏற்றுமதி 46 சதவீதம் அளவுக்கு அதிகரித்து சாதனை படைத்துள்ளது.
சென்ற ஆண்டில் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் ஏற்றுமதி ரூ.1,31,400 கோடியாக உயர்ந்துள்ளது. இது 46.4 சதவீத அதிகரிப்பாகும்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) இந்திய ஏற்றுமதி, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 45.7 சதவீதம் அதிகரித்து ரூ.3,55,500 கோடியைத் தொட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் மத்திய அரசு ரூ.13.50 லட்சம் கோடி அளவுக்கு ஏற்றுமதி மேற்கொள்ள இலக்கு நிர்ணயத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் மூன்று மாத கால ஏற்றுமதியே இதில் 26 சதவீதத்தைக் கடந்துவிட்டதால், இந்த நிதியாண்டில் ஏற்றுமதி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி பொருட்களாக பொறியியல் சாதனங்கள், பெட்ரோலியப் பொருள்கள், நவரத்தினங்கள், நகைகள்-ஆபரணங்கள், ரெடிமேட் ஆடைகள், மின்னணு சாதனங்கள், கைவினைப் பொருட்கள், கடல் உணவு, தோல் பொருட்கள் ஆகியவை உள்ளன.
இதில் கைவினைப் பொருட்களின் பங்கு ஏற்றுமதியில் சுமார் 1 சதவீதம் தான் என்றாலும், உள்நாட்டில் அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்குவது இந்தத் துறை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல ஜுன் மாதத்தில் இறக்குமதியும் 42.4 சதவீதம் அதிகரித்து ரூ.1.66 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையில் உள்ள வர்த்தகப் பற்றாக்குறை, ரூ.34,650 கோடியாக உள்ளது. ஆனால், கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த இடைவெளியும் பற்றாக்குறையும் குறைந்து வருகிறது. இதன் மூலம் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டின் ஏற்றுமதியில் 35 சதவீதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கே செல்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications