தன் மீதான புகார்களை சிபிஐ விசாரணைக்கு விடக் கோரி குமாரசாமி உண்ணாவிரதம்
பெங்களூர்: தன் மீதான ஊழல் புகார்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான எச்.டி.குமாரசாமி இன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
குமாரசாமி மற்றும் அவரது தந்தை தேவெ கெளடா மற்றும் குடும்பத்தினர் கிட்டத்தட்ட ரூ. 1500 கோடி அளவுக்கு சொத்துக்களைக் குவித்துள்ளதாக முதல்வர் எதியூரப்பா புகார் கூறியிருந்தார். மேலும் பாஜகவும் இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் கூறி வந்தது.
இதனால் கோபமடைந்த குமாரசாமி இந்தப் புகார்களை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் இதை எதியூரப்பா கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து சிபிஐ விசாரணை விடாவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார் குமாரசாமி.
இந்த நிலையில் தான் ஏற்கனவே அறிவித்தபடி இன்றுகாலை பெங்களூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.
ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள், முன்னணித் தலைவர்களுடன் பெங்களூர் சுதந்திர பூங்காவில் குமாரசாமி தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
இதுகுறித்து குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவிலேயே, ஒரு முன்னாள் முதல்வர் தன் மீதான புகார்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது வினோதமாக இருக்கிறது. அந்த நிலைக்கு இந்த அரசு என்னைத் தள்ளி விட்டது.
என்னையும், எனது தந்தை, மற்றும் சகோதரர் ரேவண்ணா ஆகியோரை அரசியலிலிருந்தே விரட்டும் நோக்கில்தான் இந்த புகார்களை பாஜக வைத்தது. அவர்களிடம் ஆதாரம் இல்லை, உண்மை இல்லை.
அவர்கள் சொல்வது உண்மையாக இருந்தால் என் மீது சிபிஐ விசாரணை வைக்கட்டும். இந்த உண்ணாவிரதம் எனது தனிப்பட்ட பெயரையும், குடும்பப் பெருமையையும் காக்கும் நடத்தும் போராட்டமாகும் என்றார் குமாரசாமி.












Click it and Unblock the Notifications