அலிகாரில் இன்று ராகுல் பங்கேற்கும் மகா பஞ்சாயத்து விவசாயிகள் மாநாடு

நீண்ட காலத்திற்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் ஒருவர் நீண்ட தூரம் 'நடந்தார்' என்ற பெருமையை ராகுல் காந்தி சமீபத்தில் பெற்றார். உ.பி. மாநிலத்தில் அவர் நடத்திய ஐந்து நாள் பாத யாத்திரை சுத்தமான வாக்கு வங்கி கவர்ச்சி ஆயுதமாக இருந்தாலும், அவரது பாதயாத்திரை உ.பி. விவசாயிகள் மத்தியில் பெரும் ஆர்வமாக கவனிக்கப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று கிரேட்டர் நொய்டா அருகே தனது பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். கிட்டத்தட்ட 25 கிராமங்களுக்கு அவர் சென்றார். 60க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடையே அவர் பேசினார்.
பாதயாத்திரையின் நிறைவாக இன்று அலிகாரில் விவசாயிகள் மகா மாநாட்டை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. இதில் கலந்து கொள்வதற்காக உ.பி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் அலிகாரில் குவிந்துள்ளனர்.
டிராக்டர்கள், மாட்டு வண்டிகள் மூலம் அவர்கள் அலிகாரில் வந்து குவிந்துள்ளனர். அலிகாரின் மையப்பகுதியான நிவாஸ் மைதானத்தில் இந்த மகா பஞ்சாயத்து மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு இன்னும் சில நிமிடங்களில் தொடங்குகிறது. ராகுல் காந்தியும் மேடைக்கு வந்து விட்டார். அவரது பேச்சைக் கேட்க விவசாயிகள் ஆவலுடன் காத்துள்ளனர்.
ராகுல் காந்தியின் பேச்சு உ.பி விவசாயிகளைக் கவருமா, அவர்கள், காங்கிரஸுக்கு ஆதரவாக திரும்புவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ராகுல் காந்தியின் இந்த மாநாட்டையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மைதானத்திற்குள் நுழையும் ஒவ்வொருவரையும் தீவிரமாக சோதித்த பின்னரே போலீஸார் அனுப்பி வருகின்றனர்.
முன்னதாக மாநாடு தொடங்குவதற்கு முன்பு திடீரென பலத்த மழை கொட்டியது. இதனால் அனைவரும் சற்று அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் கூட்டம் கலையாமல் காத்துள்ளது.












Click it and Unblock the Notifications