மாநில, தேசிய அரசியல் குறித்து கருணாநிதி, பிரணாப் பேசிக் கொண்டனர்: தங்கபாலு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் தேசிய, மாநில அரசியல் குறித்துப் பேசிக் கொண்டனர் என்று கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.
சென்னையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியும், பிரணாப் முகர்ஜியும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது தங்கபாலுவும், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமியும் உடன் இருந்தனர்.
சந்திப்புக்குப் பின்னர் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த தங்கபாலு அங்கு திராவிட தெலுங்கர் முன்னேற்றக் கழகத் தலைவர் காமாட்சி நாயுடு காங்கிரஸில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது கருணாநிதியும், பிரணாப் முகர்ஜியும் என்ன பேசிக் கொண்டனர் என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு தங்கபாலு,
பிரணாப் முகர்ஜி ஒவ்வொரு முறையும் சென்னை வரும் போது தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திப்பது வழக்கம். அதன்படி இன்றும் சந்தித்து பேசினார். பல்வேறு மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு அரசியல் பிரச்சினைகள் பற்றி பேசப்பட்டது என்றார்..
அமைச்சரவையில் 2 திமுக அமைச்சர்களை சேர்ப்பது குறித்து பேசப்பட்டதா என்று கேட்டபோது, அதுகுறித்து நான் கருத்துக் கூற முடியாது. யாரை சேர்ப்பது என்பது பிரதமரின் உரிமை. அவர்தான் முடிவு செய்வார் என்றார்.












Click it and Unblock the Notifications