திமுகவுடன் கூட்டணி தொடரும், உறவு மேலும் வலுப்படுத்தப்படும்: பிரணாப்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் அடுத்தடுத்து திமுக தலைவர்கள் கைதாகி வரும் நிலையில், திமுக கடும் அதிருப்தியிலும், விரக்தியிலும் மூழ்கியுள்ள நிலையில் அதை சமாதானப்படுத்தும் வகையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
தயாநிதி மாறன் விலகிய பின்னர் கருணாநிதியை, பிரணாப் முகர்ஜி சந்திப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திப்புக்குப் பின்னர் பிரணாப் முகர்ஜி வெளியில் வந்தார். அவரிடம் செய்தியாளர்கள் என்ன பேசினீர்கள் என்பது குறித்து கேட்டபோது இது வழக்கமான சந்திப்புதான், விசேஷமாக எதுவும் இல்லை. காங்கிரஸ் கூட்டணியின் மூத்த தலைவர் கருணாநிதி. அந்த அடிப்படையில் நாங்கள் அவரை அடிக்கடி சந்திப்பது வழக்கமானதுதான்.
திமுகவுடன் உறவு கட்டுக்கோப்புடன் உள்ளது. இந்த உறவு மேலும் வலிமையாகப்படும். உறவு தொடரும் என்றார் பிரணாப்.
வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார். திமுக சார்பில் புதிதாக அமைச்சராகப் போகும் எம்.பிக்கள் குறித்து தெரிவிக்கப்பட்டதா என்ற கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.
கருணாநிதியை ப.சிதம்பரமும் சந்திக்கிறார்:
பிரணாப் முகர்ஜியைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் சந்திக்கவுள்ளார்.
வழக்கமாக சென்னைக்கு வரும்போதெல்லாம் கருணாநிதியை சந்திப்பது ப.சிதம்பரத்தின் வழக்கம். அந்த வகையில் இன்று கருணாநிதியை ப.சிதம்பரம் சந்திக்கவுள்ளாரா அல்லது சோனியா உத்தரவின் பேரில் சந்திக்கவுள்ளாரா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications