உபியில் கல்கா எக்ஸ்பிரஸ் தடம்புரண்டதில் பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு
பத்தேஹ்பூர்: கல்கா எக்ஸ்பிரஸ் தடம்புரணடதில் பலியானவர்கள் எண்ணிக்கை 68-க உயர்ந்துள்ளது. 259 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்கு வங்கம் ஹவுராவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட கல்கா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் 12. 20 மணி அளவில் உத்தர பிரேதேச மாநிலம் மால்வா ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டது. அப்போது ரயில் மணிக்கு 108 கி. மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
இதில் ரயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 68 பேர் பலியாகியுள்ளனர். இதில் 2 ஸ்வீடன் நாட்டவரும், 14 பெண்களும் அடக்கம். இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தவிர சுமார் 259 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்தவர்கள் கான்பூருக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று பத்தேஹ்பூர் எஸ்பி ராம் பரோஸ் தெரிவித்தார்.
காயம் அடைந்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆஸ்கர் என்பவர் தெரிவித்ததில் இருந்து இறந்த ஸ்வீடன் நாட்டவரின் பெயர் விக் என்று தெரிய வந்துள்ளது. இன்னொருவரின் அடையாளம் இன்னும் தெரியவில்லை.
நேற்றிரவு முழுவதும் மீட்பு பணி தொய்வின்றி நடந்து வந்தது. சேதமடைந்த ஏசி உள்ளிட்ட மற்ற பெட்டிகளில் சிக்கிக் கொண்டிருந்தவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
தண்டவாளத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லை. ரயில் சென்று கொண்டிருக்கையில் திடீர் என்று என்ஜின் பயங்கரமாக ஆட்டம் கண்டு, புகை வந்துள்ளது, அதன் பிறகு தான் இந்த சம்பவம் நடந்தது என்று ரயில்வே வாரிய தலைவர் வினய் மிட்டல் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் பிரஷாந்த் குமார் உத்தரவிட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான ரயிலில் இருந்து தப்பிய 167 பயணிகள் சிறப்பு ரயில் மூலம் இன்று காலை டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து நடந்து 24 மணி நேரம் ஆகியும் இன்னும் விபத்துக்கான சரியான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.
நாளை காலை ஹவுரா-டெல்லி வழியில் ரயில் போக்குவரத்து துவங்கும் என்று மிட்டல் தெரிவித்தார்.
கடந்த 7-ம் தேதி மதுரா-சாப்ரா எக்ஸ்பிரஸ் கன்ஷிராம் நகர் ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் திருமணக் கோஷ்டியினர் சென்ற பேருந்து மீது மோதியதில் பேருந்தில் இருந்த 38 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் லக்னோவில் இருந்து 250 கிமீ தொலைவில் நடந்தது.












Click it and Unblock the Notifications