இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் உற்பத்தி- ஆலைகளில் ஆய்வு நடதத 30 குழுக்கள்!
சென்னை: இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகளை அரசு குழுக்கள் ஆய்வு செய்யவுள்ளன.
இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனங்களைத் தேர்வு செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.
ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டதில் தேர்வான நிறுவனங்களின் ஆலைகளை அரசுத் துறைகளைச் சேர்ந்த 30 குழுக்கள் நேரில் சென்று ஆய்வு செய்யவிருக்கின்றன. இந்த ஆய்வு உடனடியாகத் துவங்கப்படுகிறது.
அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு வாக்காளர்களுக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை வழங்கப்படவிருக்கின்றது. இந்த ஆண்டு மட்டும் சுமார் 25 லட்சம் பேருக்கு இந்த பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்தப் பொருட்களை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கும் பணிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மேற்கொண்டு வருகிறது.
ஒப்பந்தப் புள்ளிகளை பூர்த்தி செய்து அளிக்க நேற்று தான் கடைசி நாள். சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இரண்டு பிரதிநிதிகள் வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டன.
தொழில்நுட்ப ரீதியான (தயாரிக்க போதிய அனுபவம், உற்பத்தி ஆலைகள் வசதி உள்ளிட்டவை) ஒப்பந்தப் புள்ளிகள் மற்றும் விலைப்புள்ளிகள் ஆகிய இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, தனித் தனி கவர்களில் போடப்பட்டன. இதில் தொழில்நுட்ப ரீதியான ஒப்பந்தப்புள்ளிகளை வாணிபக் கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில் மிக்ஸி தயாரிக்க பல்வேறு நகரங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளிகளை கோரியிருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை கோவையைச் சேர்ந்தவை ஆகும்.
இதே போன்று கிரைண்டர்கள் தயாரிக்க கோவையைச் சேர்ந்த 19 நிறுவனங்களும், மின்விசிறி தயாரிக்க 21 நிறுவனங்களும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரியுள்ளன.
தொழில்நுட்ப ரீதியான ஒப்பந்தப்புள்ளிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுனங்களின் உற்பத்தி ஆலைகளை ஆய்வு செய்யப்படவுள்ளன. இதற்காக அரசுத் துறைகளைச் சேர்ந்த 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்களில் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தைச் சேர்ந்த ஊழியர்கள், நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள், தொழில் மற்றும் வணிகத் துறை அதிகாரிகள் அல்லது மின்வாரிய அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுக்கள் தயாரிப்பு நிறுவனங்களின் ஆலைகளுக்குச் சென்று அவற்றின் உற்பத்தி திறனை ஆய்வு செய்யவிருக்கின்றன. இந்த குழுக்களின் ஆய்வு முடிவு ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும். ஒரு குழுவின் ஆய்வு திருப்திகரமாக இல்லையெனில், அந்த நிறுவன ஆலையில் மற்றொரு குழு ஆய்வு மேற்கொள்ளும்.
இந்த ஆய்வுகள் முடிந்த பிறகே அதில் தேர்வாகும் நிறுவனங்களின் விலைப்புள்ளிகள் திறந்து பார்க்கப்படும். அதன் பின்னர் தேர்வாகும் நிறுவனக்களுக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி தயாரிப்பதற்கான அனுமதி அளிக்கப்படும்.
தயாரிப்பு பணிகள் முடிந்ததும் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை ஒவ்வொரு மாட்டத்திலும் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து தான் பயனாளிகளுக்கு கொடுக்க எடுத்துச் செல்லப்படும். இந்த பணியை வருவாய்த் துறை மேற்கொள்ளும்.












Click it and Unblock the Notifications